தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் வரை ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம் இம்மூன்றும் இல்லாத வர்களாக இருந்துவந்தபடியால் பொது ஜனங்கள் இவர்களுடைய வார்த்தையைக்கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும்,அவர்களுடைய கொள்கைகளிற் பல மிகவும் உத்தமமானகொள்கைகள் என்பதில் ஐயமில்லை. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு." தேசாபிமானம் முதலிய உத்தம குணங்கள் இல்லாவிடினும், இந்த முயற்சி தொடங்கியவர்கள் உலகப்பொது நீதிகளைநன்குணர்ந்தோர். யாவராலே தொடங்கப்பட்டதாயினும், இப்போது இம் முயற்சி தேச ஜனங்களின் பொதுக்கார்யமாக பரிணமித்து விட்டது. எனவே, இவ்வருஷத்து மஹா ஸபையில் தமிழ்மக்கள்பெருந்திரளாக எய்தி நின்று, ஸபையின், விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடக்கும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் வண்ணமாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக்கடவர். எதற்கும் பிரதிநிதிகள் நல்ல பெருங்கூட்டமாக வந்தால்தான் நல்ல பயன் ஏற்படும். ஜெர்மன் பாஷையில் "கூட்டம்" என்பதற்கும் "உத்ஸாஹம்" என்பதற்கும்ஒரே பதம் வழங்கப்படுகிறது. பெருங்கூட்டம் சேர்ந்தால்,அங்கு உத்ஸாஹம் இயல்பாகவே பெருகும் என்பது குறிப்பு. பொது ஜன உத்ஸாஹமே ஸகல கார்யங்களுக்கும் உறுதியான பலமாகும். எனவே, நமது தேச முன்னேற்றத்தின் பரம ஸாதனங்களில் ஒன்றாகிய இந்த ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயத்தில் நம்மவர், ஆண் பெண் அனைவரும், தம்மால் இயன்ற வகைகளிலெல்லாம் உதவி புரிந்து மிகவும் அதிகமானஉத்ஸாஹம் காட்டுவார்கள் என்று நம்புகிறேன். |