பக்கம் எண் :

சமூகம் - பிராமணன் யார்?

ஓர் உபநிஷத்தின் கருத்து

அஷ்டாதச உபநிஷத்துக்களிலே வஜ்ரஸூசிகை என்பதொன்று. "வஜ்ர ஸூசி" என்றால் வயிர ஊசி என்பது பொருள். இவ்வுபநிஷதம் ''பிராமணன் யார்?'' என்பதைக் குறித்து மிகவும் நேர்த்தியாக விவரித்திருக்கின்றது.

"நான் பிராமணன், நீ சூத்திரன்" என்று சண்டைபோடும் குணமுடையவர்களுக்கெல்லாம் இவ் வேத நூல் தக்க மருந்தாகும். அன்னிய ராஜாங்கத்தாரிடம் ஒருவன் போலீஸ் வேவு தொழில் பார்க்கிறான். அவன் ஒரு பூணூலைப் போட்டுக்கொண்டு, ஏதேனும் ஒரு நேரத்தில், கிராம போன் பெட்டி தியாகைய கீர்த்தனைகள் சொல்வதுபோல, பொருள் தெரியாத சில மந்திரங்களைச் சொல்லிவிட்டு,ஐயர் ஐயங்கார் அல்லது ராயர் என்று பெயர் வைத்துக்கொண்டு, "நான் பிராமணன், நான் தண்ணீர் குடிப்பதைக்கூடமற்ற வர்ணத்தவன் பார்க்கலாகாது" என்று கதை பேசுகிறான். மற்றொருவன் தாசில்தார் வேலை பார்க்கிறான். பஞ்சத்தினால் ஜனங்கள் சோறின்றி மடியும்போது, அந்தத் தாசில்தார் தனது சம்பளம் அதிகப்படும்பொருட்டுப் "பஞ்சமே கிடையாது, சரியானபடி தீர்வை வசூல் செய்யலாம்" என்று ''ரிப்போர்ட்டு''எழுதி விடுகிறான். ஆறிலோரு கடமைக்கு மேல் ராஜாங்கத்தார்தீர்வை கேட்பதே குற்றம். பஞ்ச நாளில் அதுகூடக் கேட்பது பெருங் குற்றம். அங்ஙனம் தீர்வை வாங்கிக் கொடுக்கும் தொழிலிலே இருப்பவன் ஹிந்து தர்மத்துக்கு விரோதி. அதற்குமப்பால், உள்ள பஞ்சத்தை இல்லை யென்றெழுதிஜனத்துரோகம் செய்யும் தாசில்தாருக்கு என்ன பெயர் சொல்வதென்று நமக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட தாசில்தார் தனக்கு''சாஸ்திரி யார்'' என்று பெயர் வைத்துக்கொண்டு "நான் கௌதமரிஷியின் சந்ததியிலே பிறந்தேன்" என்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிறான். இப்படியே, வைசியத்தொழில், சூத்திரத்தொழில் என்ற கௌரவத்தொழில்கள் செய்வோரும் இவற்றிற்குப் புறம்பான புலைத் தொழிலகள் செய்வோருமாகிய பல போலிப் பார்ப்பார் தங்களுக்கு இயற்கையாகவுள்ள பெருமையை மறந்துவிட்டுப் பொய்ப் பெருமையைக் கொண்டாடி வருகிறார்கள்.

நாட்டிலே இவ்விஷயமான விவாதங்களும் போராட்டங்களும் அதிகரிக்கின்றன. இத்தருணத்தில் நமது வேதம் இவ்விவகாரத்தைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொடுக்கிறது என்பது ஆராயத்தக்க பொருளாகும். வஜ்ரஸூசீ உபநிஷத்து பின்வருமாறு:-

ஞானமற்றவர்களுக்குத் தூஷணமாகவும், ஞானக்கண்ணுடையவருக்குப் பூஷணமாகவும் விளங்குவதும் அஞ்ஞானத்தைஉடைப்பதுமாகிய "வஜ்ரஸூசீ" என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன்: