வெளி நாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள், புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச்செலவுக்குப் பணம் தயார் செய்துகொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள் நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளி நாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்படவேண்டாம். பரோடாவிலிருந்து இநாயத்கான் என்ற சங்கீத வித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்களில் யாத்திரை செய்து வந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக்கலாம்.அங்கே அவர் சாதாரணமாக இருந்தார். பின்னிட்டு அவர்பல தேசங்களில் சஞ்சாரம் செய்து, பிரான்ஸ் தேசத்திலே போய்நல்ல கீர்த்தியடைந்திருக்கிறார். அங்கே பல பெரிய வித்வான்களும்பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புதத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள். சங்கீதஞானமுடைய தமிழ்ப்பிள்ளைகள்,முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு பிறகு ஐரோப்பியசங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.இது மிகவும் சுலபமான காரியம். தமிழருடைய அறிவுக்கு எந்தவித்தையும் சுலபம். இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால்,பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல்எளிதாகும். அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய்நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்தகீர்த்தியும் செல்வமும் பெறலாம். எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில், எவ்விதமான ஆசை, எதையும் கொண்டு பிறதேசங்களுக்குப் போக வேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரைசெய்யப் போதுமான திரவிய மில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.நமது வரவுக்குக்காத்திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடுபெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளி நாடுகளுக்குப் போய்உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மன வுறுதியினாலும், பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும்,வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பிவாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க. |