பக்கம் எண் :

சமூகம் - உடம்பு

வயது

மேலும் சரீர உழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலே யிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம்ஏற்பட்டிருக்கிறது. மனிதனுக்கு இயற்கை வயது நூறு. ஆகையால் ஐம்பது வயதாகும்வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாகமாட்டான். பிஞ்சிலாயே உடம்பை நாசப்படுத்தினால் சீர்கெட்டுக் குலைந்துபோய் இருபது வயதாகுமுன் கிழத் தன்மை வந்துவிடும். எனினும், இயற்கை விதிப்படி ஐம்பதுவயதுவரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே 'செயற்கைக் கிழத்தன்மை' பெற்றோர் தமதுடம்பைத் திருத்தி நல்ல நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முயற்சி செய்யலாம்.ஐரோப்பாவிலே ஐம்பது வயதுக்காரர் ஆடியோடி விளையாடுவதும், பந்தடிப்பதும், கூட்டங்கூடிக் குதிப்பதும் சாதாரணமாகப் பார்க்கலாம். நமது நாட்டுக் கல்வியாளர் சிலர் முப்பது வயதிற்கு முன்னமே தம்மைக் கிழவர் களாகப் பாவனை செய்துகொண்டு, ஜீவகளை யில்லாமல் ஸஞ்சரிக்கிறார்கள்.

பெரிய மனுஷத்தன்மை

இன்னுமொரு தொல்லை. பெரிய மனுஷத்தன்மைக்கும் சரீரவுழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில்சிலரின் மனதில் எந்தப் பிசாசோ எழுதி வைத்துவிட்டது. ஆகையால், சொற்பப் பணமுடையன்கூட, தனக்கு ஜலம் கொண்டு கொடுக்க ஓராளும், குளிப்பாட்ட ஓராளும், தலை துவட்ட ஓராளும்வைத்துக்கொண்டு, பாயோடே கிடக்கும் கிழவியைப்போல் நடந்துகொள்கிறான். மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வந்தால் போதும். வீட்டிலே அவன் பெரிய நவாப். கைகாலை அசைக்கமாட்டான். மேல் மாடத்திலே போய் ஒரு புஸ்தகம் அல்லது மேல் வேஷ்டிஎடுத்துக்கொண்டு வரவேண்டு மானால் அவன் போகமாட்டான்.பந்துக்களை ஏவுவான். வயதிலே சிறியவராக யிருந்தால் அவர்களைவிலையடிமைபோலே நடத்துவான். அற்பக்காரியங்களுக்கெல்லாம்ஒருவரையொருவர் வேலையேவி வதைக்கும் தொல்லை நமக்குள்ளேமிகவும் அதிகம்.

முடிவுரை

எவனும் உடம்பை உழைப்பினாலும், அசைவினாலும்சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்டால் மனது உத்ஸாகத்துடனிருக்கும். மனத்தளர்ச்சிக்கும் இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான்சொல்லவில்லை. அவை பரமாத்மாவினால் நியமிக்கப் பட்டன. ராமன்,கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித்துறவு கொள்ளவில்லை. ஆனால் இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போகலாகாது. அதனால் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து வனுபவிக்க வழியில்லாமற் போய்விடும். அறிவுதான்ராஜா; மனமும், இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கிவாழவேண்டும்: இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும்.

எனவே, மனவுறுதி, ஸந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீரவுழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்தவேண்டும்.

உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூற்றாண்டுவாழலாம்.