பக்கம் எண் :

சமூகம் - பழைய உலகம்

அப்போது பார்ப்பான் சொன்னான்:- "நீ போன ஜன்மத்தில் பிராமணருக்கு நல்ல தானங்கள் செய்திருக்கமாட்டாய். அதனால் இந்த ஜன்மத்தில் உனக்கு இந்த நிலைமைஏற்பட்டது. உனக்குச் பிராயச்சித்தம் நம்முடைய சாஸ்திரத்தில்கிடையாது. இந்த ஜன்மத்தில் இனியேனும் புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் உனக்குச் செல்வமுண்டாகலாம்."

இவ்வாறு அய்யர் சொல்லிய உபாயம் செட்டிக்குரஸப்படவில்லை. எனக்கும் பயனுடையதாகத் தோன்றவில்லை.அடுத்த ஜன்மத்தில் நான் மற்றொரு மனிதனாகப் பிறந்து வாழ்க்கையிலே செல்வமுண்டானால், இப்போதுள்ள எனக்குஎவ்விதமான லாபமும் இல்லை. அதைப்பற்றி எனக்கு அதிகசிரத்தை யில்லை. இந்த ஜன்மத்தில் பணம் தேடுவது தான் நியாயம். வரும் ஜன்மத்து ரூபாய்க்கு இப்போது சீட்டுக் கட்டுவது புத்திக் குறைவு.

எவ்விதமான மிருக பக்ஷியும் கூட்டம் கூடி கக்ஷிகட்டித்தன் குலத்தைத் தானே அழிப்பது வழக்கமென்று தோன்றவில்லை.மனித ஜந்து ஒன்றுக்கே இவ்வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஹோமர் கால முதல் கான்ஸ்டண்டைன் ராஜா காலம்வரையிலும் யவன தேசத்தில் போர் நிற்கவில்லை. புயற் காற்றடித்தஇரவிலேகூடகளவு நிற்கவில்லை. தீமை எக்காலத்திலுமுண்டு.விஷத்துக்கு மாற்றும், நோய்க்குத் தீர்வும், மிடிமைக்குச் செல்வமும், மடமைக்குக் கல்வியும் எக்காலத்திலும் தேடலாம். தேடவேண்டுமானால், அதற்கு உபாயங்களும் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே யிருப்பதன்றி மாறுபடுவதில்லை. மனிதர் கருவிகளையே மாற்றுகின்றனர். மற்றபடி பழமையை விடாமல் நடத்தி வருகிறார்கள்.

ஒரு வியாபாரத்தில் ஒரு லாபம் கிடைக்கவேண்டுமானால், ஒரேடியாக ஸுர்ய மண்டலத்துக்குத் தாவிப்போக முடியாது. பழைய வழக்கப்படி மெதுவாக ஒவ்வோர் அடியாகத்தான் போக வேண்டும். பதறின காரியம் சிதறும். மெதுவாகச் செல்வோனே குறியடைவான். பழைய வழி தான்நல்ல வழி. அதுதான் எப்போதுமே நடக்ககூடிய வழி. உலகத்தில்எல்லாக் காரியமும் படிப்படியாகத்தான் ஏறுகிறது. படீலென்று ஏறினால், படீலென்று விழ நேரிடலாம். காற்றாடி துள்ளிப் பாய்கிறது.சூரியன் ஒரே கணக்காக நடக்கிறான் அவன் நெறி மாறுவதில்லை,தாழ்ப்பதில்லை. செல்லுகிறான்: எப்போதுமே ஏறிச் செல்லுவான்,பழைய வழிதான் வியாபாரத்துக்குச் சரியான வழி.