'இன்றைக்கானாலும், நாளைக்கானாலும், நாளையன்றைக்கானாலும், ஒரு மாசம் சென்றாலும், ஒரு வருஷம் சென்றாலும், என்றைக்கானாலும், ஜர்மனியை நம்மால்தோற்கடிக்க முடியுமாதலால், ருஷ்யாவில் கோன்ஸ்கியை நீக்கி அதிகாரம் பெற்றிருக்கும் மாக்ஸிமிஸ்த் கட்சியார் ஜர்மனியுடன் தனி சமாதானமும் பேசத் தொடங்கியிருப்பது பெரிய காரியமில்லை.நாம், கடைசி ஆள், கடைசி ரூபாய் மிஞ்சும்வரை போரை நிறுத்தமாட்டோம்' என்ற ஒரே உறுதியுடன் மிஸ்டர் லாயிட் ஜார்ஜ் முதலிய நேசக் கட்சி மந்திரிகள் பேசுகிறார்கள். இதனிடையே, 'நேசக் கட்சியார் இந்தப் போரை நடத்திவரும் நோக்கந்தான் யாதோ?' என்று கேட்டால், 'ஒரு ஜாதியாரை மற்றொரு ஜாதியார் தம் இஷ்டப்படி அந்தந்தத் தேசத்தாரால் ஆளப்பட வேண்டுமென்ற கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டாகவும் சண்டை போடுகிறோம்' என்று நேசக்கட்சி மந்திரிகளும் ப்ரசிடென்ட்மார்களும், பத்திராதிபர்களும், சென்ற மூன்று வருஷங்களாகத் தினம் மூன்றுமுறை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பாரத புத்திரராகிய ஹிந்து முஹமதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, "சபாஷ்! நேசக் கட்சியாருக்கும் நமக்கும் ஒரே நோக்கம். நம்முடைய தேசத்தில ஆங்கிலேயர் தம் இஷ்டப்படி அரசு செலுத்தும் முறைமையை மாற்ற வேண்டும் என்றே நாமும் முயற்சி செய்து வருகிறோம். ஏற்கனவே, இங்கிலாந்தும் நம்முடைய கொள்கையைததழுவி விட்டதாகச் சொல்லுகிறபடியால், இங்கிலாந்து கஷ்ட தசையிலிருக்கும் இத்தருணத்தில் நாம் இங்கிலாந்துக்கு இடையூறுசெய்யாமல், இங்கிலாந்துக்கு நம்மால் இயன்ற உதவி செய்யவேண்டும்" என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப்போரில் மடிந்து ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தோம் கோடானுகோடிதிரவியத்தைக் கொடுத்து வருகிறோம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜ்யம் கொடுக்கும்.நம்மை ஏமாற்றாது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவி செய்யும்போது, காங்கிரஸ் முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதேகைமேலே சுயராஜ்யம் வேண்டும் என்றுநம்மவர் கேட்கவேண்டும்என்று நான் சொல்லுகிறேன். சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும். இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் "கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியு முன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்து வருகிறது. அதில் ஸகல கட்சியாரும் சேர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, இந்தத் தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்தவேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்தத் தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டுமென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி 'கூ! கூ!' என்று பெரிய சப்தம் போடவேண்டும். திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும், யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து நகைத்து, 'காங்கிரஸ் முஸ்லீம் சங்கங்களே தேசத்துக்குப் பொது'என்பதை ஒரே வார்த்தையாகஎங்கும் நிலைநிறுத்த வேண்டும். காங்கிரஸ் முஸ்லீம் சபைகளை எதிர்த்து, நமக்கு சுயராஜ்யம் வேண்டாமென்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கி விட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நமது பிரதிநிதிகளாகிய காங்கிரஸ்முஸ்லீம் சபையாரைத் தூண்டவேண்டும். மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால், இந்தச்சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலே நடைபெற்று வரவேண்டும். ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபையைக் கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுதபிள்ளை பால்குடிக்கும். |