பக்கம் எண் :

103

15

‘ஓ’ என்னும் ஒலிக்குறிப்பு வேர்ச்சொல்

ஊ- ஓ.

உரத்த ஓசையைக் குறிக்கும் எழுத்தொலி அல்லது ஒலிக்குறிப்பு ‘ஓ’ என்பதாகும்.

“ஓவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே”     (சீவக. 1843)

ஓ - கோ, ஓ - சோ.

கோவென்றலறினான், சோவென்று மழை பெய்தது என்பன உலக வழக்கு.

சேய்மை விளிக்குச் சிறந்த ஒலி ஓகாரமே.

எ - டு : அண்ணோ!, ஓ அண்ணா!

‘ஓல்’ என்பத ஈற்று விளியுருபாகும்.

எ - டு : சாத்தா வோல்!

இலக்கணஞ் சாரா உலக வழக்கில், ஓகாரஅடிப் பிறந்த ஓர் அசையும் அதன் திரிபும் தனி விளியொலிகளாகும். அவையாவன

ஓய் - வேய் - வே.

கதிர் முற்றிய நிலங்களிற் படிந்துண்ணும் பறவைகளை ஓவென்று கத்தி ஓட்டுவதால், பறவையோட்டுதல் ஓப்புதல் எனப்பட்டது.

“கழனிப் படுபுள் ஓப்புநர்”         (புறம். 29 13)

‘ஓ’ என்பது ஓர் ஒலிக்குறிப்பாதலால், ஓல் என்பது ஒலிப் பெயராயிற்று.

ஓலுறுதல் - ஒலிபெறுதல்.

“ஓலுறு பெருக்கின்”            (இரகு, நகர. 42)