பக்கம் எண் :

105

ஓதுதல் = 1. படித்தல். “ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும்” (குறள். 834). ஒ. நோ : படுதல் = ஒலித்தல். படு - படி. 2. சொல்லுதல். “ஓதலிய சுகர்போல” (தாயு. ஆகார. 32). 3. மன்றாடுதல். “இயல்போ டஞ்செழுத் தோதி” (திருவா. 41 7).

ஓது - ஓதை = 1. பேரோசை (திவா.). 2. எழுத்தொலி (பிங்.)

ஓதை - ஓசை. M. osa.

ஓசை - ஓசனி. ஓசனித்தல் = பறவை சிறகடித்தல்.

“ஓசனிக்கின்ற வன்னம்”         (சீவக. 2652)

ஓல் - ஒல். ஒல் என்பது ஓர் ஒலிக்குறிப்பு.

‘ஒல்லென வொலித்தல்’ என்பது இலக்கிய வழக்கு.

“ஆய ரொல்லென வொலிப்ப”      (சீவக. 438)

ஒல் - ஒலி. ஒலித்தல் = 1. ஓசையிடுதல். “ஒலித்தக்கா லென்னாம் உவரி” (குறள். 763). 2. வெளுத்தல். “ஊரொலிக்கும் பெருவண்ணார்” (பெரிய பு. திருக்குறிப்பு. 113).

வண்ணார் ஏதேனும் ஓர் ஒலியிட்டு வெளுப்பது வழக்க மாதலால், ஒலித்தற் சொல் வெளுத்தற் பொருள் கொண்டது.

3. துப்புரவாக்குதல்.

“உதிர்துக ளுக்க நின்னாடை யொலிப்ப”    (கலித். 81 31)

ஒலி = 1. இசை (திவா.). 2. காற்று (திவா.). 3. சொல்.

“நின்னுருவமு மொலியும் ஆகாயத்துள”     (பரிபா. 431)

ஒலி - ஒலியல் = 1. ஆடை (பிங்.). 2. ஆறு. “அவ்வொலியிற் கொப்பாகுவதோ வுவராழியதே” (கந்தபு. காளித்தி. 6).

ஒலி = ஒலியன் = 1. ஆடை (கோயிலொ. 88). 2. தனியுயிரொலி - phoneme. (இக்காலைப் பொருள்)

ஒலி = ஒலிசை = மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் திருமணத் தின் நான்காம் நாள் கொடுக்கும் வரிசை.

ஒல்லென = ஒல்லென்று சொல்லும் அளவில் விரைவாக, சுருக்காக, சட்டென.

“வல்வினை......... ஒல்லென வொப்ப”     (ஞானா. 1 33)

ஒல் - ஒல்லே = சுருக்காக, விரைவில்.