பொய் சொல்லுதலைப் பொய் பிடித்தல் என்பது சேலம் வட்டார வழக்கு. ஒடுங்கு - அடங்கு - அடக்கு - அடக்கம். அடங்குதல் = சுருங்குதல், உள்ளமைதல், உட்படுதல், கீழ்ப்படிதல், புலனொடுங்குதல், உறங்குதல், சாதல். ஒடுங்கு - ஒதுங்கு - ஒதுக்கு - ஒதுக்கம். ஒதுங்குதல் = 1. ஒடுங்குதல். 2. விலகுதல். 3. வறுமையடைதல். 4. சாதல். ஒதுங்கு - அதுங்கு - அதுக்கு - அதுக்கம். அதுங்குதல் = உள்ளொடுங்குதல், கலம் நெளிதல். அதுக்குதல் = வாயிலடக்குதல், அமுக்குதல். அதுக்கு = ஒடுக்கு, கலநெளிவு. ஒதுங்கு - ஒருங்கு. ஒருங்குதல் = 1. ஒடுங்குதல். “உரமொருங்கியது.... வாலியது மார்பு” (கம்பரா. யுத்த. மந்திர. 90). 2. அழிதல். “நமரெல்லாரும் ஒருங்கினர் சமரில்” (பிரபோத, 38 1) ஒ. நோ : விதை - விரை. ஒருங்கு - ஒருக்கு. ஒருக்குதல் = 1. அடக்குதல். “மனத்தை யொருக்கு மொருக்கத்தி னுள்ளே” (பதினொ. திருவிடைமும். 24). 2. அழித்தல். “இன்றொருக்கினே னித்தனை வீரரை” (கம்பரா. பிரமா. 195). இனி, ஒடுங்கு - ஒருங்கு என்றுமாம். ஒ. நோ : அடுப்பங்கடை - அடுப்பங்கரை, படவர் - பரவர். ஒன்றுசேர்தலைக் குறிக்கும் ஒருங்கு என்னும் சொல்லும், ஒடுங்குதலைக் வெவ்வேறாம். ஒன்றுசேர்தற் கருத்திற் சாதற்கருத்திற் கிடமின்மை காண்க. ஒல்கு - அல்கு. அல்குதல் = 1. சுருங்குதல். 2. அழிதல். “அளியினாற் றொழுவார்வினை யல்குமே” (தேவா. 168 10). 3. தங்குதல் (பிங்.). ஒ. நோ : ஒதுங்குதல் = புகலடைதல். ஒதுக்கு = 1. பிறர் வீட்டிற் குடியிருக்கை. 2. புகலிடம். ஒதுக்கிடம் = 1. ஒதுங்குமிடம். 2. தங்கும் விடுதி. 3. அண்டி வதியுமிடம். |