ஒதுக்கம் = இருப்பிடம். “ஏற்றினுக் கொதுக்கம் செல்வ நின்னிணை மலர்ச்சேவடி கொடுத்த” (சீவக. 3100) ஒதுக்கக்கருத்தில் தங்கற்கருத்துத் தோன்றிற்று. அல்கல் - 1. குறைவு. “அல்கலின் மொழிசில வறைந்து” (நைடத. அன்னத்தைக் கண். 66). 2. வறுமை. (திவா.). 3. தங்குகை (அகம். 20). அல்குநர் = தங்கும் குடிகள். “அல்குநர் போகிய வூரோ ரன்னர்” (கலித். 23) அல்கு - அஃகு. அஃகுதல் = 1. அளவிற் குறுகுதல். (நன். 60). 2. சுருங்குதல். “கற்பக் கழிமடம் அஃகும்” (நான்மணி. 20). 3. குவிதல். “ஆம்பல்... மீட்டஃகுதலும்” (காஞ்சிப்பு. திருக்கண். 104). 4. நுண்ணிதாதல். “அஃகி யகன்ற வறிவு” (குறள். 175). 5. மனங்குன்றுதல். 6. கழிந்துபோதல். “அல்லாயிர மஃகினவால்” (கம்பரா. அதிகா. 69) அஃகல் = 1. சிறிதாகை (திவா.). 2. வறுமை (திவா.). அல்கு - அற்கு. அற்குதல் = நிலைபெறுதல். “அற்கா வியல்பிற்றுச் செல்வம்” (குறள். 333) தங்கற்கருத்தில் நிலைபேற்றுக் கருத்துத் தோன்றும். அற்கு - அற்கம் = அடக்கம். “அற்க மொன்றும் அறிவுறாள்” (திவ். திருவாய். 6 5 4) குடிகள் அரசனுக்கு அடங்கி வரி கொடுப்பதால், உல்கு என்னும் சொல் தென்சொல்லாகவு மிருக்கலாம். சுல்க (sulka) என்னும் வடசொல் மணமகட் கொள்ளும் பரிசத்தையே சிறப்பாய்க் குறிக்கும். உல்கு என்னும் சொல்லேனும், சுல்க என்னும் வடசொல்லின் திரிபான சுங்கம் என்னும் சொல்லேனும், தமிழிற் பரிசத்தைக் குறிப்பதில்லை. ‘உல்கு’ தென்சொல்லாயின், உல்கு - சுல்க (வ.) - சுங்கம் என்று திரிந்திருத்தல் வேண்டும். தென்சொல்லின் திரிபான வடசொல்லினின்று திரிந்த சொல்லும் பிற்காலத் தமிழில் வழங்கும். எ - டு : தென்சொல் | வடசொல் | தென்சொல்திரிபு | அரத்தம் | ரக்த | ரத்தம் | திரு | ஸ்ரீ | சீ |
|