பக்கம் எண் :

79

குத்தூசி, கோணியூசி, தையலூசி, வகுவூசி; ஊசிக் கணவாய் (மீன்). ஊசிக்கழுத்தி (மீன்), ஊசிக்களா, ஊசிக் காது, ஊசிக்காய் (தேங்காய்), ஊசிக்கார் (நெல்), ஊசிக்கால் (தூண்), ஊசிச்சம்பா, ஊசித்தரை (அவரை), ஊசித் தூற்றல், ஊசித்தொண்டை, ஊசிப் பாலை, ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசிமிளகாய், ஊசிமுல்லை, ஊசிவேர் முதலிய கூட்டுச் சொற்கள் தொன்றுதொட்ட வழக்காம். நெசவுத் தையலும் முதன்முதல் நிகழ்ந்த இடம் பண்டைத் தமிழகமே.

ஊசி -வ. சூச்சி.

உளி - உளியம் = உளிபோற் கூரிய உகிர்களையுடைய கரடி.

உளி - உகிர் (வ. நகம்). M. uhir, K. ugur, Tu. uguru, Te. goru (கோரு).

உள் - உளு = மரத்தைத் துளைக்கும் புழு. உளுத்தல் = புழுவால் துளைக்கப்படுதல். உளு - உசு.ம. உளும்பு.

உள் - அள் = 1. வாய். அள்ளூறுதல் = வாயூறுதல். 2. காது. அள்குத்து = மகமதியப் பெண்டிர் அணியும் காதணிவகை.

உள் - உள்ளிடம், இடம், 7ஆம் வேற்றுமை யுருபு, உள்ளிருக்கும் மனம், நீருள் மூழ்கிச் செல்லும் பறவை (snipe).

K., M. உள், inside.

உள் - உள்ளல், உள்ளான் (snipe).

“உள்ளும் ஊரலும்”              (சிலப். 10 117)

“வாளைமீன் உள்ளல் தலைப்படலும்”     (திரிகடு. 7)

“உள்ளானும் வலியானும் எண்ணிக் கொண்டு”    (குற்றா. குற. 85 1)

தெ. உல்லாமு, க. உல்லங்கி.

உள் - உள்ளம் - உளம் = உள்ளிருக்கும் மனம்.

உள்ளுதல் = கருதுதல், நினைத்தல். உள்ளல் = கருத்து.

உள் - உள்கு. உள்குதல் = நினைத்தல். உள்கு - ஊழ்கு. ஊழ்குதல் = (வ.) தியானித்தல்.

“நின்றனை யுள்கி யுள்ள முருகும்”        (திருவாச. 5 50)

“புனிதன பங்கய மூழ்கி”            (கோயிற்பு. பாயி. 7)

உள்ளாளம் = உடம்பசையாமல் உள்ளடக்கமாகப் பாடும் பாட்டு.