4. கறை ஆடையிற் பற்றுங் கறை பெரும்பாலும் கருநிறமாயிருப்பதால், கறுப்பு, கறை, களங்கம் முதலிய கருமைப் பெயர்கள் மாசும் மறுவுமான புள்ளிகளையும் பொட்டல்களையுங்குறித்தன. களங்கம் - களங்கன் = திங்கள் (திவா.). 5. குற்றம் ஒரு கறை அதையுடைய பொருட்குக் குற்றமாதலாலும், கறுப்பு நிறம் பெரும்பாலும் மக்களால் வெறுக்கப்படுவதாலும் கறைக் கருத்திலும் கறுப்புக் கருத்திலும் குற்றக் கருத்துத்தோன்றிற்று. கள்ளம் = குற்றம். களங்கம் - களக்கம் = குற்றம். “களக்க மில்லாதோன்’’ (திருவாலா. 50:8). கரில் = குற்றம். கரில் - அரில் = குற்றம். “அதங்கோட் டாசாற்கரிறபத் தெரிந்து’’ (தொல். சி. பா., கரிசு. கருள், கறுப்பு, கறை, காழ் முதலிய குற்றங்குறித்த சொற்கள் முன்னரே கூறப்பட்டன. 6. சினம் “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள’’ என்று தொல்காப்பியம் (855) ‘கறுப்பு’ச் சொல்லைச் ‘சிவப்பு’ச் சொல்லொடு சேர்த்துக் கூறுவதால், கறுப்பு என்பது இதில் நிறம் பற்றிய சொல்லாகவேயிருத்தல் வேண்டும். வெண்களமர், கருங்களமர்; வெள்ளாளர், காராளர்; வெள்ளொக்கல், காரொக்கல் என்று தொன்றுதொட்டு வழங்கிவரும் எதிரிணைச்சொற்கள், பண்டை நாளிலும் இன்று போன்றே தமிழருட் பொன்னருங் கரியரும் இருந்தமையை உணர்த்தும். ஆகவே, அவ் விருசாராரும் சினந்த போது அவர் முகம் சிவந்தும் கறுத்தும் போனமை உய்த்துணரப்படும். கறு, கறுவு, கறுமு முதலிய சொற்கள் இவ்வகையிற் சினங்குறிக்கத் தோன்றியவையாகும். 7. பஞ்சம் உணவின்றியும் ஒரு தொழிலும் நடைபெறாதும் உள்ள பஞ்சக் காலம் இருண்ட இராக்காலம் போன்றிருத்தலால், பஞ்சம் கருப்பெனப்பட்டது. 8. மறைப்பு கரிய நிறமும் கரிய இருளும் பொருள்களையும் அவற்றின் வடிவங்களையும் மறைப்பதால், கருமைக் கருத்தில் மறைவு அல்லது மறைப்புக் கருத்துத் தோன்றிற்று. |