கர் - கர. கரத்தல் = 1. மறைதல். “கரந்துறை கணக்கும்’’ (மணிமே. 2 26). 2. மறைத்தல். “தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்’’ (புறம். 1 8). கரப்பான்= பகலில் மறைந்து திரியும் பூச்சி. கரவு = மறைவு. Gk. kruptos (hidden, secret.) 9. கொற்றொழில் இரும்பு கருநிறமாயிருப்பதால், அக் கனியத்தின் பெயரும், ஐவகைக் கொல்லுள் ஒன்றான இரும்படிப்புத் தொழிலின் பெயரும், அத் தொழிலைச் செய்வோன் பெயரும், கருஎன்னுஞ் சொல்லை அடைமொழியாகப் பெற்றன. கரும்பொன் = இரும்பு. “கரும்பொ னியல்பன்றி’’ (சீவக. 104). கருந்தாது= இரும்பு. “கருந்தாது கொட்கு மிருஞ்சிலை’’ (ஞானா. 57 கருங்கொல் = இரும்பு (சூடா.). கருங்கொல்லன் = இரும் படிப்போன். கருமகன் - கருமான் - கருமன் (பிங்.) = இருப்புக்கொல்லன், “கருமகக் கம்மியன்’’ (கம்பரா. பம்பா. 37). ம. கருமான், E. blacksmith. 10. கருமம் வினைசெய்து காய்ப்பேறும்போது, செந்நிறத்தார் அல்லது பொன்னிறத்தார் கை மிகச் சிவந்தும், கருநிறத்தார் கை மிகக் கறுத்தும், தோன்றுவது இயல்பு. “செய்தகைசேவேறும், செய்யாத கை நோவேறும்’’ என்பது பழமொழி. இது செந்நிறத்தார் கையைக்குறித்தது. கருநிறத்தார் கை கருங்கையெனப்படும். “கருங்கை வினைஞர்’’ (பத்துப். 4:223). “கொன்றுவாழ் தொழிலினும் வன்பணித் தொழிலினும் கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படும்’’ (திவா.) கருங்கை என்பதற்கு வலிய கை என்று பொருளுரைப்பர் அடியார்க்குநல்லார்; அப் பொருள் இருவகை நிறத்தார்க்கும் பொதுவாகும். கருநிறத்தாராயின், கருங்கை என்பது கருமையையும் வலிமையையும் ஒருங்கே உணர்த்தும். கருநிறத்தாரின் பெரும்பான்மை பற்றியே, கருங்கை யென்பது செங்கையையும் தழுவிற் றென அறிக. கருத்தல் = கை கருக்க வினை செய்தல், வினை செய்தல், செய்தல். ஒ.நோ : செய்தல் = கை சிவக்க வினை செய்தல், வினை செய்தல், செய்தல். |