முள்கா - (உள்கா) - உள்கார் - உட்கார். இன்றும் கல்லா மக்கள் உளுக்கார்தல் என்றே கூறுவர். iii. நேராதல் குத்துக்கல்லும் பிற குத்தும் பொருள்களும் பொதுவாக நேராகக் குத்துவதால், குத்தற்கருத்தில் நேர்புக் கருத்துத் தோன்றிற்று. இங்கு நேர்பு என்றது வளையாமையை; சாயாமையை அன்று. செங்குத்து நட்டுக்குத்து முதலிய வழக்குகளை நோக்குக. குத்துதல் = நேராதல். குத்து - குத்தி - (கத்தி) - கதி. கதித்தல் = நேராதல். நேர்கிழக்காகச் செல்லுதலைக் கிழக்கே கதிக்கச் செல்லுதல் என்பர் நெல்லை நாட்டார். கதி - கதிர் = வளையாமற் செல்லும் ஒளியிழை. கதிர் - கதிரவன். iv. குத்தும் பொருள்கள் உல் = தேங்காயுரிக்குங் கருவி. உள் - அள் = நீர்முள்ளி. உள் - உளி. உளி - உசி - ஊசி. உளித்தலைக்கோல் = நுனியிற் கூரான கோல். உளியம் = உளிபோன்ற கூரிய நகமுள்ள கரடி. உறு - உறும்பு = குத்தும் சிறு கரம்பைக்கட்டி. உகிர் = நகம். உள் - அள் - (அய்) - அயில் = வேல். குத்து - குத்தி = பற்குத்தி போன்ற கருவி. குள் - கள் - கள்ளி = ஒருவகை முட்செடி. கள் - கண்டு = கண்டங்கத்தரி. கண்டு - கண்டம் = கண்டங்கத்தரி, கள்ளி, எழுத்தாணி. கண்டு - கண்டல் = முள்ளி, நீர்முள்ளி, தாழை. கண்டல் - கண்டலம் = முள்ளி. கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, வாள். கண்டகம் - கண்டகி = இலந்தை, தாழை, மூங்கில், முதுகெலும்பு. |