சும்பு - சம்பு - சாம்பு. சாம்புதல் - வாடுதல். சும் - (சுவ்) - சுவறு. சுவறுதல் = நீர்வற்றுதல். சுவ்வென்று உள்ளே நீரை இழுக்கிறது என்பது வழக்கு. சுடு - சொடு - சொடி. சொடிதல் = வெயிலில் வாடுதல். சொடித்தல் = வற்றுதல். சோடை = வறட்சி. துவர்தல் = உலர்தல். துவர் = விறகு, சருகு. துவர் - துவர்த்து - துவட்டு. துவர்த்துதல் = ஈரம் புலர்த்துதல். (துவ்) - துவி - தாவம். (துவ்) - (துகு) - தகு - தகை = தாகம். தகு - தாகம். புல் - புலர். புல் - பொல் - பொலு. பொலுபொலுத்தல் = நன்றாகக் காய்தல். பொல் - (பொரு) - பொருக்கு = காய்ந்த சோற்றுப்பருக்கை. முள் - முளி. முளிதல் = காய்தல், உலர்தல். vii. செந்நிறம் நெருப்பானது சிவந்த நிறமாயிருப்பதால், நெருப்பின் பெயர்களினின்றும் அப் பெயர்களின் அடிகளினின்றும் செந்நிறத்தைக் குறிக்கும் சொற்கள் திரிந்துள்ளன. இளங்கோவடிகள், “எரிநிறத் திலவம்” (சிலப். 5: 214) என்று கூறுதல் காண்க. எரிமலர் = முருக்குமலர் (சீவக. 662). எரிமலர் = செந்தாமரை (சீவக. 2741). உல் - அல் - அலத்தம் - அலத்தகம் = செம்பஞ்சுக் குழம்பு. அல் - அர் - அரன் = சிவன் (செந்நிறத்தான்.) தமிழருள் ஒரு சாரார் இறைவனைத் தீவடிவினனாகக் கருதிய தால், அவனை அரன் என்றும் சிவன் என்றும் பிறவாறும் அழைத்தனர். அர் - அரக்கு = சிவந்த மெழுகு. அர் - அரத்தம் = சிவப்பு, குருதி. அரத்தம் - அத்தம் = சிவப்பு. அத்தம் - அத்தி = சிவந்த கனிதரும் மரம். அர் - அருணம் = சிவப்பு. அருணன் = காலைச் செங்கதிரோன். அருணமலை = சிவன் அழற்பிழம்பாக நின்ற மலை. அருணமலை = அண்ணாமலை. |