ஒருவன் இருண்ட வேளையில் ஒரு தோற்றத்தைக் கண்டு அரண்டு குழறும் ஒலியினின்று, பே (பேபே) என்னும் ஒலிக்குறிப்புத் தோன்றியுள்ளது. பேபே என்று உளறுகிறான் என்பது வழக்கு. ஓர் அதிகாரியிடம் அல்லது கொடியோனிடம் ஒன்றை உரைக்கும்போது ஒருவன் அஞ்சிக் குழறுதலையும், பேபே என்று உளறுதல் என்பர். ஆகவே, பே என்பது ஓர் அச்சக் குறிப்பொலியாகும். இதனின்று பின்வருஞ் சொற்கள் தோன்றியுள்ளன. பே - பேம் = அச்சம். “பேநாம் உருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.” என்பது தொல்காப்பியம். (தொல். உரி, 67) பேதல் = அஞ்சுதல். பே - பேய் = அஞ்சப்படும் ஆவி அல்லது தோற்றம். பேய்தல் = அஞ்சுதல். ‘பேயப்பேய விழிக்கிறான்’ என்பது உலக வழக்கு. பேய் - பேயன் = பேய் பிடித்தவன், பேயாடி, பேய்பிடித் தவனைப் போன்ற பித்தன், பித்தனைப் போன்ற மூடன். பே - பேக்கு = பேதை, மூடன். பேக்கு - பேக்கன். பேக்கு - பேக்கல். பேக்கல் + ஆண்டி = பேக்கலாண்டி. பே - பேது = பேய் பிடித்தாற்போன்ற மருள், மயக்கம், அறியாமை. பேது + உறு = பேதுறு. பேதுறுதல் = மயங்குதல், பேது - பேதை = மூடன், அறிவிலி, வெள்ளை (கள்ளமிலி). பேதை - ஏதை. பேது - பேத்து. பேத்துதல் = அஞ்சி உளறுதல், உளறுதல். பேத்து - பேந்து. பேந்துதல் அஞ்சுதல். ‘பேந்தப்பேந்த விழிக்கிறான்’ என்பது உலக வழக்கு. பேந்து = பேய். பேந்து - பேந்தான் = பேய்ப்பந்து என்னும் விளையாட்டு. பேத்து - பீத்து. ஒ.நோ: தேஞ்சுவை - தீஞ்சுவை. பீத்துதல் = உளறுதல். தற்புகழ்ச்சியாய் உளறுதல்.
|