(துள்) - தள். புடைத்தல் - முன்தள்ளுதல், வீங்குதல். முலை = முன்தள்ளிய மார்பு. (மொஞ்சு) - மொஞ்சி = முலை. (8) தருதல் வாழை குலையீனுதலைக் குலைதள்ளுதல் என்றும், தென்னை பனை பாளை விடுதலைப் பாளை தள்ளுதல் என்றும், நெல் புல் கதிர் ஈனுதலைக் கதிர் தள்ளுதல் என்றும் கூறுவர். மரஞ்செடிகொடிகள் காய் கனியோடிருக்கும் போது மக்கள் அவற்றைப் பறித்தல் அவை கொடுக்க அவர் கொள்வதுபோலிருத்தலால்; அவை காய்த்துக் கனி தலைப் பலன் தருதல் அல்லது பலன் கொடுத்தல் என்பர். இதனால், தள்ளுதற் கருத்தில் தருதற் கருத்துப் பிறந்தது. தள் - தரு - தார் - தா - த. தார்- தர். தள் என்னும் வினை தருதற் பொருளில் தரு எனத் திரிந்து, அதன் மேலும், எதிர்மறை வினையில் ‘தார்’ அல்லது ‘தா’ என்றும் (தாரான், தரான்), ஏவல்வினையில் தா என்றும், இறந்த கால வினையில் ‘த’ என்றும் (தந்தான்) திரிந்துள்ளது. யகரமெய்யீறாகத் திரியாத ளகரமெய்யீற்று இயற்சொற்களெல்லாம், பொதுவாக ருகரவீற்றவாகத் திரிகின்றன. எ-டு: கள் - கரு - கார் (கருமை). இளமையை உணர்த்தும் குரு நுரு முரு முதலிய அடிகளெல்லாம், குல் நுல் புல் முல் முதலியவற்றின் திரிபான குள் நுள் புள் முள் முதலியவற்றினின்று திரிந்தவையே. கள் - கரு - கார் என்னும் திரிபு போன்றதே தள் - தரு - தார் என்பதும். முழுத்திரிபு நிலையிலும், தருதல் வினை வருதல் வினையை ஒத்துள்ளது. வள் - வரு - வார் - வா - வ. வார் - வர். இதன் விளக்கம் ‘வளைதல்’ இயலிற் கூறப்பெறும். அரும்பண்டத்தைக் குறிக்கும் தாரம் என்னும் சொல், தார் என்னும் திரிபடியாகப் பிறந்தது. கடல் தரும் பல பொருள் “கடற் பஃறாரம்” (புறம். 30). |