“உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்” (குறள்.592) என்று வள்ளுவனார் ‘ஊக்கமுடைமை’ யதிகாரத்தில் கூறியிருத்தல் காண்க.* உள் - (உய்) - (உயல்) - உஞல் - உஞற்று. உஞற்றுதல் = உள்ளந் தூண்டுதல், முயற்சி செய்தல், வருந்தி யுழைத்தல். முன் - முனை. முனைதல் = முற்படுதல், முயற்சிசெய்தல், ஊக்கங் கொள்ளுதல். முனை - முனைப்பு. முள் - (முய்) - முயல் - முயற்சி. முயல் - முயற்று. முயலுதல் = முனைந்துழைத்தல். முசு - முசுமுசு - முசுமுசுப்பு = ஊக்கம். (4) மேற்செலவியல் திறந்த வெளியில் நிலமட்டத்திலிருந்து உயிரிகள் முற்செல்லக் கூடிய திசைகள், பக்கத்திசை எட்டும் மேற்றிசை ஒன்றுமாக ஒன்பதாம். அவற்றுள், மக்களும்மற்றப் பறவா வுயிரிகளும் முற்செல்லக்கூடிய திசைகள் பக்கத்திசையாகிய எட்டே. பறவைஒன்றே ஒன்பான் திசையும் முற்செல்லக்கூடியதாகும். நிலத்திலும் நீரிலுமிருந்து மேலெழும் பொருள்கட் கெல்லாம் முற்செலவென்பது மேற்செலவே. மேற்செலவு முற்செலவில் ஒரு வகையேயாதலால், முற்செலவைக் குறிக்கும் ஊகாரமே மேற்செல வையும் உணர்த்தும் என்க. மேற்செல்லுதல் அல்லது மேன்மேற் செல்லுதல் என்பது, முற்செலவையும் மிசைச்செலவையும் பொதுப் படக் குறித்தல் காண்க. ஏண் சேண் முதலியசொற்கள் உயரத்தையும் தொலைவையும் பொதுப்படக் குறித்தலையும் நோக்குக. (1) எழுதல் எழுதலாவது கிளர்தலும் துள்ளுதலும். துள்ளுதல் என்பது முன்னோக்கித் துள்ளுதலும் மேனோக்கித் துள்ளுதலும் என இரு வகைத்து. அவற்றுள் முன்னது முற்செலவியலிற் கூறப்பட்டது; பின்னது இவண் கூறப்படும். 1. உள்ளம் என்பதைப் பரிமேலழகர் ஆகுபெயராகக் கொண்டது பொருந்தாது. மனத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல்லும், ஊக்கத்தைக் குறிக்கும் உள்ளம் என்னும் சொல்லும் வெவ்வேறாம். மனத்தைக் குறிப்பது உள்ளிருப்பது என்றும், ஊக்கத்தைக் குறிப்பது முற்செலுத்துவது என்றும் பொருள்படும். |