மூலம் என்னுஞ் சொல் முதலாவது மரவடியையே குறித்திருத்தல் வேண்டும். “போதி மூலம் பொருந்தி” (மணிமே. 26:47) மூல - மூலி = மருந்திற்குரிய வேர்ச் செடிகொடி. மூலி - மூலிகை. iii. திரண்டொலித்தல் உலம் - உலம்பு. உலம்புதல் = பேரொலி செய்தல். குமுகுமெனல் = பேரொலி செய்தல். “குமுகுமெனவே முழக்க” (திருப்போ. சந். பிள்ளைத். சிறுபறை. 2) கும் - குமுறு. கும் - குமுதம் = பேரொலி. “கதறிமிகு குமுதமிடு பரசமயம்” (திருப்பு. 948) துள் - தள் - தழ - தழங்கு. தழங்குதல் = முழங்குதல். முள் - (மள்) - மண் = முழக்கு. “மண்முழா மறப்ப” (புறம். 65) முள் - முழ - முழங்கு - முழக்கு - முழக்கம். குறிப்பு: இங்குக் குறிக்கப்பட்ட சொற்கள் ஒலிக்குறிப்புத் தழுவியவை. iv. பூப்படைதல் நிலைத்திணையில், திரண்ட அல்லது பருத்த முதலும் சினையும் முதிர்ச்சியடையும். அதனால், திரட்சிபற்றிய சொற்கள் சில பூப் படைதலை உணர்த்தும். உருத்தல் = முதிர்தல். கும் - குமரி = திரண்டவள், கன்னி, கன்னிமை, இளமை, அழி வின்மை (என்று மிளமை). மூப்பு சாக்காட்டிற் கேதுவாதலால், இளமை அழியாமையைக் குறித்தது. கும்மல் = கூடுதல், குவிதல், திரளுதல், கும் - கொம் - கொம்மை = திரட்சி. |