தமிழ்ச்சொல் வளம் பயிர்வகைச் சொற்கள் சொல்வளம் இலக்கியச் செம்மொழிகட்கெல்லாம் பொது வேனும், தமிழ்மட்டும் அதில் தலைசிறந்ததாகும். கால்டுவெல் கண்காணியார் இதுபற்றிக் கூறுவதாவது “தமிழல்லாதகளின் திராவிட மொழிகளின் அகராதிகளை ஆயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக வுரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம் முதலியபிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள. எடுத்துக்காட்டாக பேச்சு வழக்குத் தமிழில் இருப்பிடத்தைக் குறிக்கும் சொல் ‘வீடு’ என்பது; ஆனால், இதனொடு தெலுங்கிற்குரிய ‘இல்’ என்னும் சொல்லும், கன்னடத்திற்குரிய ‘மனை’ என்னும் சொல்லும், இனி இவற்றோடு வடமொழிக்கும் பின்னிய (Finnish) மொழிகட்குமுரிய ‘குடி’ என்னும் சொல்லும் தமிழகராதியிற் குறிக்கப்பட்டுச் சில சமயங்களிற் பயன்படுத்தவும் பெறுகின்றன. இங்ஙனமாகத் தமிழ் இலக்கணமும் அகராதியும், திராவிட மொழிகளின் அமைவுகட்கும் வேர்ச்சொற்கட்கும் ஒரு பெரும் பொதுக்களஞ்சியமாகும்’’ என்பது. (‘திரவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்’ முன்னுரை, பக்.84, 85) தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள்மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெறும். |