வளைந்த சங்கையும் சங்குபோன்ற தலையையுடைய (அல்லது நிலத்தைக் கிளைக்கின்ற) கோழியையுங் குறிப்பது. திரிவும் புடைபெயர்ச்சியுந் திரிபுங் காரணமாக ஒரு வடிவடைந்து ஒருசொற்போலத் தோன்றும் சொற்கள் போலியாம். எ-டு: கத்தியைக் குறிக்கும் வாள் என்னுஞ் சொல் “வள்’ என்னும் வேரினின்றும், ஒளியைக் குறிக்கும் வாள் என்னும் சொல் விள் என்னும் வேரினின்றும் திரிந்தவையாகும். ‘மாள்’, ‘மாண்’ என்னும் இருவினைச் சொற்களும் இறந்த காலத்திற் புடைபெயருங்கால், மாண்டான் என ஒரு வடிவடையும். ‘புழைக்கை’ என்பதன் திரிபான பூட்கை என்னும் சொல்லும், ‘பூண்கை’ என்பதன் திரிபான பூட்கை என்னும் சொல்லும், திரிபின் காரணமாக ஒருவடி வடைந்தவையாகும். உண்மையான பலபொரு ளொருசொற்கள், ஓரினந் தழுவியவும், வேறினந் தழுவியவும் என இருவகைப்படும். ஓரினந் தழுவியவை புல் என்பது, புல் கம்பு மூங்கில் ஆகிய மூன்றையும்; தாழை என்பது, கைதை தெங்கு ஆகிய இரண்டையும்; குருகு என்பது நீண்டு வளைந்த கழுத்துள்ள நாரை கொக்கு அன்னம் முதலிய நீர்ப் பறவைகளையும் கொக்கலகு போல் மூக்குள்ள கொல்லுலைத் துருத்தியையும் குறிக்கும். இங்ஙனமே பிறவும். வேறினந் தழுவியவை ஓங்கல் = மலை, யானை. மீன் = நீர்மீன், விண்மீன். தும்பி = ஒருவகை வண்டு, யானை. இவ் விரண்டும் தூம்புள்ள கைபோன்ற உறுப்பை (proboscis) யுடையவை. சுவரொட்டி = ஒருவகை ஈரல், ஒருவகை விளக்கு, ஒருவகைப் புறா, ஒருவகை விளம்பரத்தாள். இவை யாவும் சுவரில் ஒட்ட அல்லது ஒட்டிவைக்கப் பெறுவன. சில பொருள்கள் ஓரினம் அல்லது ஒத்த தன்மையுடையன என்பதை யுணர்த்த, அவற்றின் பொதுப்பெயர் இனப்பொருள் |