வடசொல்லாகக் கருதப்படுகின்றன. “காலம்’, உலகம், மீனம், கலை முதலிய பல சொற்கள் இத்தகைய. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியு மின்மை காரணமாக, தமிழ்ப்பற்றுள்ள தூய தமிழர்கூடச் சில தென்சொற்களை வடசொற்களென ஒதுக்கி விடுகின்றனர். ‘தீர்மானம்’ என்பது தூய தென்சொல். தீர்மானித்தது அல்லது முடிவு போகக் கருதியது என்பது இதன் பொருள். இதை யறியாது இதனை யொதுக்கி வருகின்றனர் தூய தமிழர் சிலர். ஒ.நோ: ஆரஆய் - ஆராய். அச் சொற்களை வழங்குவதினால், மொழி வளருமென்றும் வளம்பெறுமென்றும், ஆங்கிலத்தை யெடுத்துக்காட்டி அறியாதாரை மருட்டி வருகின்றனர் சில தமிழ்ப் பகைஞர். உவகை களிப்பு மகிழ்ச்சி என முத்தென்சொல் இருக்கவும் அவை வழக்கற்று ஆனந்தம் சந்தோஷம் ஜாலி (jolly) குஷி முதலிய அயற்சொற்களும்; உண்மை வாய்மை மெய்ம்மை என முத்தென்சொல் இருக்கவும், அவற்றுக்குப் பதிலாக சத்தியம் நிஜம் வாஸ்தவம் என்னும் வடசொற்களும்; இறை பகுதி வரி முதலிய பல தென்சொற்களிருக்கவும், அவற்றுக்குப் பதிலாகக் கிஸ்து என்னும் உருதுச் சொல்லும்; இன்னும் இவை போன்ற எத்துணையோ பலவும் வழங்கி வருவதால் தமிழ்தளர்ந்ததோ, வளர்ந்ததோ? நடுநிலையும் பகுத்தறிவுமுள்ள அறிஞர் கூறுவாராக. தமிழ்ப் பொதுமக்கள் வாயினின்றும், ‘சொல்’ என்று வராது ‘வார்த்தை’ என்று வருவதற்கும், ‘ஆண்டு’ என்று வராது ‘வருஷம்’ என்று வருவதற்கும், ‘குலம்’ என்று வராது ‘சாதி’ என்று வருவதற்கும் எது தகுதியின்மையோ? இன்னும் நூலாசிரியர் சிலர் வடசொற்களைத் தமிழிற் புகுத்தி அதன் தூய்மையைக் குலைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, ‘தலைக்கீடு’ என்பதை ‘வியாஜம்’ என்றும், ‘பணிவிடை’ என்பதை ‘சிசுருஷை’ என்றும், ‘நல்லிணக்கம்’ என்பதை ‘சௌஜன்யம்’ என்றும், ‘செழிப்பு’ என்பதை ‘சுபிக்ஷம்’ என்றும், இன்னும் இவை போன்ற பலவும் எழுதி வருவதை ஒரு சிலரான தமிழறிஞரன்றி வேறு யாரறிவார்? ஆதலால், தமிழை அழியாது காக்கவேண்டுமெனின், அதன் வழக்கிறந்த சொற்களையெல்லாம் மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவரல் வேண்டும். |