10

ஆராய்ச்சி உரை

உடையது; ஆனால் வரையறையில்லை. இந்த மூன்று தன்மைகளையும் பண்ணத்தி என்ற பெயரும், பாட்டிடைக் கலந்த பொருள என்ற இலக்கணமும், பாட்டின் இயல என்பதும் புலப்படுத்துகின்றன.

    இந்த இலக்கணங்களாலும், வாய் மொழியாக வழங்குவனவற்றோடு சார்த்திச் சொன்னமையாலும் பண்ணத்தியென்பது நாடோடிப் பாடல்களையே குறிப்பது என்று கொள்ளலாம்.

    மேலே, பண்ணத்தியைப் பற்றித் தொல்காப்பியர் மூன்று சூத்திரங்களைக் கூறுகிறார்.

    “அதுவே தானும் பிசியொடு மானும்.”
    “அடிநிமிர் கிளவி யீரா றாகும்.”
    “அடியிகந்து வரினும் கடிவரை யின்றே.”1

என்பன அவை.

        ‘அந்தப் பண்ணத்தியென்பது பிசியோடு ஒத்து வரும்; அடிகள் மிகுதியாகி வரும் பாட்டுப் பன்னிரண்டடியாக வரும்; அந்த அடிக்கணக்கில் மிக்கு வந்தாலும் நீக்குதற்குரிய தன்று’ என்பது இவற்றின் பொருள். பெரும்பாலும் பன்னிரண்டடிகளுக்குள்ளே இப்பாடல்கள் அமையும் என்றும், சிறுபான்மை அந்த அளவுக்கு மேலும் வருமென்றும் தெரிகிறது.

    ‘பிசியொடு மானும்’ என்பதனை, ‘அதனை ஒத்தலாவது அதுவும் செவிலிக்குரித்தென்றவாறு. பிசியொடும் என்ற உம்மையால், “பொருளொடு புணராப் பொய்ம்மொழி யோடும், பொருளொடு புணர்ந்த நகைமொழியோடும்” ஒக்குமென்று உணர்க’ என்று பேராசிரியர் விளக்குகிறார்.

    வாய் மொழிப் பாடல்களையும், புதிர்களையும், கதைகளையும் செவிலித் தாய்மார் தலைவனைப் பிரிந்த தலைவிக்குச் சொல்லிப் பொழுது போக்குவது வழக்கம். அதையே இவ்வுரைகாரர் குறிக்கிறார். பாட்டிமார்கள் இவற்றைச் சொல்வது எல்லா நாடுகளுக்கும் உரிய வழக்கமே யாகும்.

    பிசியின் இலக்கணத்தை,

“ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்
      தோன்றுவது கிளந்தது துணிவி னானும்
      என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”
2
_____________________________________________________
 
1. செய்யுளியல், 181, 182, 183.                         2. செய்யுளியல், 176