என
என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
உவமையாகிய பொருளைக் கூறி மறைமுகமாகச் சொல்வது, வெளிப்படையாகத் தெளிவுபெறச் சொல்வது என்ற
பிசிகள் இரண்டு வகையாகும். பண்ணத்தி பிசியோடொக்கும் என்று தொல்காப்பியர் சொல்வதைக்
கொண்டு நாடோடிப் பாடல்களிலும் குறிப்பாகப் பொருளை உணர்த்துவன ஒருவகை யென்றும், வெளிப்படையாகப்
பொருளை உணர்த்துவன ஒருவகை யென்றும் கொள்ளலாம்.
இவ்வளவும் கூறியவற்றிலிருந்து
தொல்காப்பியர் காலத்தில் வாய் மொழியாக வழங்கும் இலக்கியங்கள் புலவர்களின் கவனத்துக்குரியனவாக
இருந்தனவென்றும், நாடோடிப் பாடல்களைப் பண்ணத்தியென்று வழங்கினரென்றும் தெரியவரும்.
3. சிலப்பதிகாரத்தில்
கண்ட வரிப்பாடல்கள்
எழுவகைப் பாடல்கள்
நாடோடிப் பாடல்களில்
பல வகைகள் உண்டு. ஏற்றம் இறைத்தல், மீன் பிடித்தல், சுண்ணாம்பு குத்துதல் முதலிய தொழில்களைச்
செய்பவர்கள் அத்தொழில்களால் உண்டாகும் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டே அவற்றைச் செய்வார்கள்.
நெடுநேரம் தொழில் செய்வதனால் அவர்கள் பாடும் பாடல்கள் நீண்டனவாக இருக்கும். அவை ஒரு வகை.
வண்டிக்காரன், இடையன், வீட்டில் இருக்கும் மகளிர் முதலியோர் பாடும் பாடல்கள் இன்பமாகப்
பொழுது போக்குவதற்கு உதவுவன. அவை ஒரு வகை. கல்யாணத்தில் பாடும் பாடல்கள், யாரேனும் இறந்தால்
பாடும் ஒப்பாரி, தெய்வத்தை வழிபடும்போது பாடுபவை முதலியன உணர்ச்சி மிக்கனவாக உள்ளவை.
இவை ஒரு வகை. குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டும்போதும், சோறு ஊட்டும்போதும், தாலாட்டும்
போதும் தாய்மார் முதலியோர் பாடுபவை ஒரு வகை. குழந்தைகளும் மகளிரும் விளையாடும்போது தாமே
பாடும் அம்மானை, பலிஞ்சடுகுடு, கண்ணாமூச்சி முதலிய விளையாட்டுப் பாடல்கள் ஒருவகை. அரிய
கருத்துக்களை உடையன வாய்ப் பாமரர்களல்லாதவர்களிடத்தில் வாய்மொழியாகவே வழங்கும் பாடல்கள்
பல உண்டு; இவற்றில் சிறந்த தத்துவக் கருத்துக்கள் இருக்கும். இவை ஒரு வகை. கதை பொதிந்த பாடல்கள்
ஒரு வகை.
|