வர
வரிப்பாட்டின் இலக்கணம்
வரி என்பது ஒருவகைக்
கூத்துக்கும், ஒருவகைப் பாடலுக்கும் பொதுவாக வழங்கும் பெயர். இரண்டிடத்தும் பாடல் உண்டு. வரிப்
பாடலின் இயல்பை, ‘வரிப் பாடலாவது பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கிச்
சொல்லப்பட்ட எட்டன் இயல்பும் ஆறன் இயல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும்
முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ்
சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்’1 என்று சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர்
விளக்குவார். ஆற்று வரிக்கு உரை எழுதுவதற்குமுன் இவ்வாறு அவர் எழுதினார். சிலப்பதிகாரத்தில்,
“அரங்கும் ஆடலும் தூக்கும்
வரியும்”2
“ஆடலும் வரியும் பாணியும்
தூக்கும்”3
“நேரத் தோன்றும் வரியும்
குரவையும்”4
“வரியும் குரவையும் சேதமும்”5
என்னும் இடங்களில் வரும் வரி என்னும்
சொல் வரிப் பாடலையே குறித்து நிற்கின்றது.
வரிக்கூத்து
இனி வரிக் கூத்து என்பது
ஒன்று உண்டு. அது வரிப் பாட்டோடு ஆடுவதாதலின் அந்தப் பெயர் பெற்றதென்று தோன்றுகிறது. அதன்
இலக்கணத்தைப் பழைய சூத்திரம் ஒன்று தெரிவிக்கிறது.
“வரியெனப் படுவது
வகுக்குங் காலைப்
பிறந்த நிலனும் சிறந்த
தொழிலும்
அறியக் கூறி ஆற்றுழி
வழங்கல்”6
என்ற அச்சூத்திரத்தை அடியார்க்கு
நல்லார் மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். பிறிதோரிடத்தில், ‘வரியாவது அவரவர் பிறந்த
நிலத் தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழில் தன்மையும் தோன்ற நடித்தல்’7 என்று
உரைநடையில் இவ்விலக்கணத்தை அமைக்கிறார். சூத்திரத்தில், “அறியக் கூறி” என்றமையினால்
பிறந்த நிலத்தின் தன்மையும் தொழில் தன்மையும் புனைந்த
_____________________________________________________
1. சிலப்பதிகாரம்,
7 : ஆற்றுவரி, உரை. 2, சிலப். 10, கட்டுரை, 10. 3. சிலப் 14 : 150.
4. சிலப், 23: கட்டுரை, 11. 5. சிலப். நூற் கட்டுரை, 13. 6. சிலப். 3
: 24, அடியார் மேற், 7. சிலப் 8 : 74-7, மேற்.
|