New Page 1

16

ஆராய்ச்சி உரை

குதம்பை, குயில், குரவை, குறத்தி, கூடல், கொச்சகச் சார்த்து, கோத்தும்பி, கோழிப் பாட்டு, சங்கு, சாயல் வரி, சார்த்து வரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திக் காப்பு, தெள்ளேணம், தோணோக்கம், நிலைவரி, நையாண்டி, பகவதி, படைப்பு வரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுண்ணம், மயங்குதிணை நிலைவரி, முகச்சார்த்து, முகமில் வரி, முகவரி, மூரிச் சார்த்து, வள்ளைப்பாட்டு முதலியன. இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும் நொண்டிச் சிந்து, சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு, கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே.

    ஐயரவர்கள் காட்டிய உருப்படிகளில் கீர்த்தனம் முதலிய சிலவற்றையன்றி மற்றவை யாவும்   நாடோடி   உலகத்திலிருந்து   இலக்கியப்    புலவர்கள்  ஏற்றுத்  தழுவி அமைத்தனவே யாகும்.

4. சங்க இலக்கியங்களில் உள்ள செய்திகள்

    சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் அந்த அந்த நிலங்களுக்கு ஏற்ற வகையில் பாடியும் ஆடியும் இன்புறும் காட்சிகளைக் காண்கிறோம்.

குறிஞ்சி

    குறிஞ்சி நிலத்தில் இறைவனை வழிபடும் பூசாரியாகிய வேலன் முருகனைப் பாடி ஆவேச உருவத்தில் வரச் செய்கிறான். மறியை அறுத்து வெறியாட்டெடுக்கும்பொழுது முருகனைப் பரவிப் பாட்டு பாடுகிறான்.

“அணங்கென உணரக் கூறி, வேலன்
    இன்னியம் கறங்கப் பாடிப்
    பண்மலர் சிதறிப் பரவுறு பலிக்கே”1
   
“வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி.”2

    முருகனை வழிபடும் பூசாரிச்சியாகிய தேவராட்டி குறிஞ்சி நிலத்துக்குரிய குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பாடலைப்பாடுகிறாள்.
______________________________________________________

1. நற்றிணை, 322: 10-12,               2. குறுந்தொகை, 263 : 4.