New Page 1

20

ஆராய்ச்சி உரை

“கணம்கெழு கடவுட் குயர்பலி தூஉய்
    பரவினம் வருகம் சென்மோ, தோழி”1

என்பது நெய்தல் நிலத்துத் தலைவியின் கூற்று.

    நெய்தல் நிலத்தில் ஊசலாடும் மகளிர் அதற்குரிய பாடல்களைப் பாடுகிறார்கள்.

“சேயுயர் ஊசற்சீர் நீஒன்று பாடித்தை.”2

    கலித்தொகையில் மடலேற்றத்தைப் பற்றிய செய்தி வரும் பாடல்களால், மடலால் குதிரை பண்ணி ஊர்ந்து வரும் ஆடவன் பாடுவதுண்டு என்ற செய்தி தெரிய வருகிறது.

“என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன்
        சிறிதாங்கே
    ஆடெனின் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ.”3
   
“அணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி
    அணிநலம் பாடி வரற்கு.”4
   
“வருந்தமா வூர்ந்து மறுகின்கட் பாட.”5
   
பின் வந்த நூல்கள்

    சங்க காலத்து நூல்களுக்குப் பின் எழுந்த காப்பியங்களிலும் பிற நூல்களிலும் இவ்வாறு அவ்வத் திணையில் வாழும் மக்கள் தத்தமக்கு உரிய வகையில் பாடுவதாக வரும் இடங்கள் பல.

“பண்கள்வாய் மிழற்றும் இன்சொற் கடைசியர்.”6
   
“கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலிற்
    கன்று றக்கும் குரவை.”7

என்பனபோலப் பல எடுத்துக் காட்டுக்களைக் காட்டலாம்.

    மேலே கூறிப் போந்தவற்றிற் குறிப்பிக்கப்பெறும் பாடல்கள் யாவும் நாடோடிப் பாடல்களே. இத்தகைய பாடல்களில் நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாரதியார் குயிற் பாட்டில் பாடுகிறார்.

“ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்இடிக்கும்
    கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
    சுண்ணம்இடிப் பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
    பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்

______________________________________________________

1. நற். 358 : 6-7.                           
2. கலி. 131 : 24.                           
3. கலி. 140 : 13-4.                        

4. கலி. 141 : 5-6.

    5. கலி. 141 : 22.
    6. கம்ப. நாட்டுப். 10.
    7. கம்ப. நாட்டுப். 34.