மண
மண்டையெல்லாம் நான்வகிர்ந்து
மல்லிகைப்பூ வச்சாலும்
மண்டையிலே போட்டஎழுத்து
மாதாகூட அறியலையே!1
துயர மிகுதியால் அவள்
மனம் எதை எதையோ நினைக்கிறது. பெண்கள், “பாவம் இரும்பாலடித்த தாலியாக இருக்கட்டும் என்பார்கள்.
இவளுக்கு அது நிற்கவில்லை” என்று கூறுகிறார்கள். அதைக் கேட்ட அவளுக்கு, ‘தட்டான் எல்லோரையும்போலத்தானே
எனக்கும் தாலி செய்து தந்தான்? ஒருகால் கொடிக்குப் பதிலாக நூலைக் கொடுத்துவிட்டானோ?’ என்று
தோன்றுகிறது.
தாலிசெய்த தட்டான்கூடத்
தகடுவச்சுச் செய்தானே
தாலிக் கொடிக்குப் பதிலாய்
நூலைக்கோத்துக்
கொடுத்தானே?2
வால்மீகி ராமாயணம்
தோன்றுவதற்கு மூலம், வால்மீகி முனிவர் ஒரு வேடனைச் சபித்த சாபம் என்று சொல்வார்கள். இரண்டு
அன்றிற் பறவைகள் ஒரு மரத்தில் இணைந்திருந்தபோது ஒன்றை வேடன் அம்பால் எய்துவிட்டான். அதுகண்டு
வால்மீகி முனிவர் அந்த வேடனைப் பார்த்துச் சொன்ன சுலோகமே இராமாயணமென்னும் ஆலமரம் படர
வித்தாயிற்றாம். இங்கே உள்ள இரண்டு கண்ணிகள் வால்மீகி முனிவரின் அந்தச் சுலோகத்தை நினைப்பூட்டுகின்றன.
குளத்தங் கரையோரம் -
ஒரு
குயில்போலக் குந்தியிருந்தேன்
குயிலென்றும் பார்க்காமே
- ஒரு
குண்டுபோட்டுச் சுட்டுட்டானே!
ஆற்றங் கரையோரம் - ஒரு
அன்னம்போலக் குந்தியிருந்தேன்
அன்னமென்றும்
பார்க்காமே - ஒரு
அம்பை வச்சு எய்தானே!3
இங்கே வேடன் யமன் என்பதைச்
சொல்லவும் வேண்டுமோ?
__________________________________________________
1. ப. 279; 18-19.
2. ப. 279; 22.
3. ப. 281; 12, 13.
|