ஆண

62

ஆராய்ச்சி உரை

    ஆண்டவர் ஆதாம் ஏவாள் என்றவர்களைப் படைத்ததும், ஏதேன் தோட்டத்தில் வாழ்ந்ததும், அத்தோட்டத்தில் ஒரு வர்ணப் பழமரம் வளர்ந்திருந்ததும், பாவிப் பிசாசு வந்து தின்னத் தகாத அந்தப் பழத்தைத் தின்ன வழி சொல்லிக்கொடுத்ததும், ஏவாள் அதைப் பறித்துத் தான் பாதி தின்று ஆதாமுக்கும் பாதி கொடுத்ததும், அவர்கள் அப்படித் தின்றதனால் அவர்களுடைய சந்ததியார்கள் பாவிகளாகப் போனதுமாகிய வரலாறு ஆதாம் ஏவாள் கும்மியில் வருகிறது.  பின்பு,

மார்கழி மாசம் இருபத்தஞ் சாந்தேதி
        மாதா மாரியம்மாள் பெற்றெடுத்த
    நீதிசேசு நம்மை நேர்வழி நடத்தப்
        பாதி ராத்திரியிலே பிறந்தாரடி1

என்று ஏசுவின் பிறப்பைச் சொல்கிறது கும்மி. டிசம்பர் மாதம் இருபத்தைத்தாந் தேதியைத் தமிழாக்கி மார்கழி இருபத்தைந்தாந் தேதியென்று இந்தக் கிறிஸ்தவத் தமிழர்கள் பாடுகிறார்கள். ஏசுபிரான் ஞானம் பெற்று, ‘குருசிலே பாடுபட்டு முத்திக்குச் சுத்தமாய்ப் போனார்’ என்று இந்தக் கும்மி முடிகிறது.

    ஏசு சரிதையைச் சொல்லும் கும்மி பின்பு வருகிறது. ஏசு பிறந்தார். பல இடங்களுக்குப் போனார். பல அற்புதங்களைச் செய்தார். இந்தக் கும்மி பத்துக் கண்ணிகளோடு முடிகிறது. பிறகு வேறு சந்தத்தில் ஏசுவையே விளித்துப் பாடும் பாட்டு ஒன்று அப்பெருமான் சரிதையை விரிவாகச் சொல்கிறது. 108 கண்ணிகள் அடங்கியது இப் பாடல். ஏசு பிறந்து குழந்தைப் பருவத்துக்குரிய விளையாடல்களெல்லாம் விளையாடுகிறார். அன்னை கன்னி மரிக்குத் துணையாக இருக்கிறார். சூசை முனிக்கு அடங்கி நடக்கிறார். முப்பது வயசுக்குமேல் கப்பலேறிப் போகிறார். பல அற்புதங்களைச் செய்கிறார். பல அரிய உபதேசங்கள் செய்கிறார்.

    கிறிஸ்துவர் பாடும் பாட்டு ஆனாலும் தமிழராக வாழ்பவர்கள் பாட்டு ஆதலினால் இந்த நாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களை ஏசுவுக்கும் சார்த்திச்சொல்லியிருக்கிறான், இதைப் பாடிய நாடோடிப் பாவலன்.

    சாஷ்டாங்கமாக விழுந்து வணக்கம்புரிவது இந்தநாட்டுமரபு.

ராசாநீ என்றெண்ணியே-சின்னப் பாலகா
        சாஷ்டங்கமும் செய்தார்களே-சின்னப் பாலகா
2
____________________________________________________

    1. ப. 319 : 13.                                   2. ப. 325 : 18.