பக்கம் எண் :

தாலாட்டு

253

தினைமாவைத் திரித்துவைத்துக் - கண்மணியே
        திரித்தமாவைச் சலித்துவைத்துச்
                 

45

சலித்தமாவை உருட்டிவைத்துக் - கண்மணியே
        சலிப்பில்லாமே இனிப்பும்போட்டு

    புள்ளையார்க்கும் கொடுத்துப்பார்த்தேன் - கண்மணியே
        பூசாரிக்கும் கொடுத்துப்பார்த்தேன்.

    ஒருபிள்ளைக்குப் பத்துருண்டை - கண்மணியே
        ஊர்ப்பிள்ளைக்கும் கொடுத்துப்பார்த்தேன்.

    நேத்திக்கடன் நிறைவேற்றினேன் - கண்மணியே
        நெய்விளக்கு ஏற்றிவைத்தேன்.

    தானமெல்லாம் செய்துபார்த்தேன் - கண்மணியே
        தருமமெல்லாம் செய்துபார்த்தேன்.                

50

காசிதீர்த்தம் செய்துபார்த்தேன் - கண்மணியே
        குற்றாலத்தில் குளித்துப்பார்த்தேன்.

    ராமேச்வரம் போய்ப்பார்த்தேன் - கண்மணியே
        பாவநாசமும் போய்ப்பார்த்தேன்.

    பழனிமலை மேலிருக்கும் - கண்மணியே
        பழனியாண்ட வனையும்பார்த்தேன்.

    கொஞ்சறத்துக்குப் பிள்ளையில்லை - கண்மணியே
        கொள்ளிவைக்கப் பிள்ளையில்லை.

    என்னபாவம் செய்தேனோஅம்மா - கண்மணியே
        ஏதுபாவம் செய்தேனோஅம்மா!                   

55

மெழுகிவைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே
        விளையாடப் பிள்ளைஇல்லை.

    கூட்டிவைத்த வீட்டுக்குள்ளே - கண்மணியே
        குப்பைபோடப் பிள்ளைஇல்லை.

    நிறைத்துவைத்த நிறைகுடத்தைக் - கண்மணியே
        குறைத்துவைக்கப் பிள்ளைஇல்லை.

    ஆக்கிவைத்த அண்டாச்சோற்றைக் - கண்மணியே
        அள்ளித்தின்னப் பிள்ளைஇல்லை.