பக்கம் எண் :

14முத்துப்பட்டன் கதை

சண்டை நடந்ததென்று சொல்லுகிறார்கள் ‘கச்சை கட்டு’ என்றால் சண்டைக்கு
தயார் செய்தல் என்பது பொருள் “படுகளப் பாறை” என்ற பாறையில் தான்
பட்டன் இறந்து விழுந்து ஓடைக்கரையில் உருண்டான் என்று
சொல்லுகிறார்கள். “அரசடித் துறை” அல்லது “பூசைத்துறை” என்பது
பட்டவராயன், பொம்மக்காவையும் திம்மக்காவையும் பார்க்கு முன்
பூசைசெய்துகொண்டிருந்த இடமென்று சொல்லப்படுகிறது.

     இவ்வளவு விவரமாக இடங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன
சக்கிலியர்களும், தொட்டியர்களும் வாழ்ந்த இடமும் “தொட்டியர் வலசை”
என்று சுட்டிக்காட்டப்படுகிறது, இவையாவும் எதனைக் காட்டுகின்றன?
இக்கதை உண்மையான கதையென்பதையே வலியுறுத்துகின்றன.

     இதற்கு மேல் சில செய்திகளை 100 வயது நிறைந்த சிங்கம் பட்டி,
சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் கூறினார்கள்.

     வாலப்ப கடையும் அவனது உறவினர்களான சக்கிலியர்களும்
நீலகண்டன் என்ற தொட்டியனது மேற்பார்வையின் கீழ் மலைக்காவல் புரிந்து
வந்தார்களென்றும், அவர்களே மலையிலுள்ள மாட்டுக்கிடைகளைக் காவல்
காத்து வந்தார்களென்றும் சிங்கம்பட்டியில் வசித்துவந்த சுப்பிரமணியக்
கவிராயரவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் இந்த நீலகண்டனையும்,
அவனைச் சேர்ந்தவர்களையும், கொன்றுவிட்டுத்தான் நல்ல குட்டி என்பவன்
சிங்கம் பட்டிப் பாளையத்தை நிறுவினான் என்றும் கூறுகிறார்கள்.
நீலகண்டன் கொல்லப்பட்டான் என்பதற்கு “நீலகண்டன் கசம்”, “நீலகண்டன்
தலை வெட்டிப்பாறை” என்ற பெயர்கள் சான்றாகக் காணப்படுகின்றன. இதே
நீலகண்டன்தான் வில்லுப்பாட்டிலும்,

“காக்க வேணும் பொதிகாசல
   மென்று கட்டுடனே வாரார் !
வந்து திரு நீலகண்டனைக் கண்டு
   கடவிளை தானும் விட்டு”

     என்று குறிப்பிடப்படுகிறான். பட்டவராயன் கதை நிகழ்ச்சிகள் நடக்கும் காலத்தில் அவன் வாழ்ந்திருக்கிறான். அப்படியானால் பட்டவராயன்
கொல்லப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல குட்டி
திருநீலகண்டனைக் கொன்று சிங்கம்பட்டியை ஸ்தாபித்திருக்கவேண்டும்.
சிங்கம்பட்டியை நல்லகுட்டி ஸ்தாபித்தது சுமார் 350 வருஷங்களுக்கு
முன்புதான் என்று தெரிகிறது. அப்படியானால் இச்சம்பவங்களும் சற்றேறக்
குறைய அதே காலத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும்.