மாட்டுக்காரர்கள் கொளாநிலை வந்து அரசம் பாளையம் துறையில் ஆற்றில் இறங்கி பாதி ஆற்றுக்கு வரும்போது தேடி வந்த வேட்டுவக் கவுண்டர்கள் திமு திமுவென்று கரைக்கு வந்துவிட்டார்கள். இதைக் கண்டு பயந்த மாட்டுக்காரர்கள் “அப்பா, பொன்னம்பல சுவாமி! சின்னண்ணா! எங்களை எதிரிகளின் கையில் காட்டிக் கொடுத்து விட்டாயே” என்று முறையிட்டார்கள். இந்தச் சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பெரிய பீரங்கி வெடித்தது போல் ஒரு பயங்கரமான சத்தம் கேட்கவே, துரத்தி வந்தவர்கள் அத்தனை பேரும் மிரண்டு வந்த வழியே திரும்பிப் போய்விட்டார்கள். அவர்கள் போன பிறகு, மாட்டுக்காரர்கள், சுவாமியை மனத்தில் தியானித்துக்கொண்டு மோழியப் பள்ளி வந்து சேர்ந்தபின், “சுவாமி அண்ணன்மாரே! உங்கள் துணை இல்லையென்றால் இந்த நேரம் எங்களைக் கொன்று போட்டிருப்பார்கள். உங்கள் அருளால் நாங்கள் தப்பிப் பிழைத்தோம். இனித் தாங்கள் சொல்லிப் போன பிரகாரம் நடந்து கொள்வோம்” என்று திட்டமிட்டபடி போய்ச் சேர்ந்தார்கள். அண்ணன்மார் சுவாமி வெங்கம்பூரில் உள்ள பெரிய மிராசுதாரர்களுக்கெல்லாம் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அதாவது, மாடு சேதம், ஆடு சேதம், வீட்டில் பலவிதமான பொருள் சேதம் இப்படி நஷ்டத்தைக் கொடுத்தார். அவர்கள் எல்லாரும் சேர்ந்து இதைப்பற்றி யோசனை செய்தார்கள். இத்தனை நாளுமில்லாத நஷ்டம் இப்போது மட்டும் உண்டாகும் மாயம் என்ன? என்று பூசாரியை அழைத்துக் கேட்க, பூசாரி சொன்னதாவது: “நீங்கள் எல்லாரும் கூடி நாடகம் நடத்தும் போது பந்தம் பிடிக்க எண்ணெண் இல்லாமல் போகவே மாட்டுக்காரனிடம் | | |
|
|