பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை311

கூட்டி வரலாமே குணமாகத்தான் அவரை
நம்முடைய குமாரனை நலமாக அப்போது
பொன்னர் சங்கர் அரண்மனைக்கு பொறுமையுடன் நீயும் போய்
அவர்களைக் கண்டறிந்து பேசி கடுகி அழைத்துவா
புள்ளி சிறு சோழரை பொன்னரிடம் அனுப்ப

ஓலைச்சுருளெழுதி ஒரு தூதுவன் கையில் கொடுத்து
புள்ளி சிறு சோழரைப் போயழைத்து வாருமென்றார்
ஓலை கொண்டு தூதன் ஓடிவருகையிலே
புள்ளி சிறு சோழர்தான் சோட்டுப் பெண்களுடன்
தாயக்கரம் ஆடி தானிருக்கும் வேளையிலே

தூதன் ஓலைச்சுருள்கொண்டு ஓடிவந்தான் அப்போது
ஓலைச்சுருள் வாங்கி அதன் உள்கருத்தைத் தான்பார்த்து
சோழருமே நமை அழைத்த சேதி தெரியவில்லை
சோழகுமாரன் துருசாய் வருகையிலே
மகனை வாரியெடுத்தணைத்து சோழர் வண்ணமுத்தம் தான்கொடுத்து

ஏந்தி எடுத்தணைத்து மகனை இணைமார்பில் முத்தமிட்டு
வாரும் மகனே நான் ஒருவார்த்தை சொல்லக் கேளுமினி
நம்முடைய சீமையிலே நலமாக இப்போது
மேனாட்டு வேட்டுவர்கள் வெகுகூட்டம் தான்கூடி
ஆடுகொள்ளை மாடுகொள்ளை அடங்கலும் கொள்ளையிட்டு

இப்படியே செய்கிறார்கள் இவர்களை அடக்கிவைக்க
நம்முடைய சீமைக்கு நலமான காவல்வைக்க
வளநாடு கோட்டையிலே வாள்வீரன் காராளன்
பொன்னரென்னும் சங்கரென்னும் போர்வீரர் தானுமுண்டு
அவர்களை நீபோய் அழைத்துமே வாருமென்றார்
அந்த மொழி சொல்ல சிறு சோழர் அப்போது ஏதுசொல்வார்