பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை319

சாத்துகிறார் சந்தனத்தை தன்னுடைய திரேகமெல்லாம்
பூசியே சந்தனத்தை பொன்னுந் திருமேனியிலே
வகையாக ராஜாவும் வந்திருந்த அந்நேரம்
தலை வாழை யிலையெடுத்து தாதிமார் தான் போட்டு
கரகம் பிடித்துமப்போ தாதிமார் கைக்குநீர் வார்த்து

பிரம்புப் பெட்டிக் கூடையிலே போசனங்கள் கொண்டுவந்து
வகையுடனே சாதமிட்டு வாள் மயிலாள் தாதியர்கள்
குத்துப் பருப்புமிட்டு குடத்துடனே நெய் சொரிந்து
பதினாறுவகைக் கறிகள் பாங்காக முன்னேவைத்து
உத்தமியாள் நல்லதங்களை ஏது சொல்வாள் அந்நேரம்

பட்டிக்காடு குடியானவர் எங்களுக்கு பலகறியும் சிக்காது
உங்கள் கறியை நீர் நினைத்து உண்ணுமினிச் சாதமென்றாள்
அந்தமொழி கேட்டு ராஜன் அப்போது ஏது சொல்வான்
இருவருடன் பிறந்தவர்க்கு நான் மூவருடன் பிறப்பு
ஒக்கப் பிறந்தவர்க்கு அம்மா உபசரிப்புத்தானுமென்ன?

உண்ணுகிறேன் தாயே என்று உத்தமன்னர் சொன்னாரே
அமுது எடுத்துண்டு அவர் அப்போ எழுந்திருந்து
கரம்பிடித்து தாதிமார் கைக்கு நீர் வார்த்தபின்பு
வெற்றிலை விடாக்காயும் மெத்த வாரித்தான் கொடுத்து
சந்தோஷமாகவே தான் வந்தார் ராஜாவும்

ஆசாரம் வந்திருந்து அப்போது ஏதுசொல்வார்
வாருமையா நல்ல பொன்னு வெகுநேரமாகுதிப்போ
உறையூரு மட்டளவும் இனிவாங்களென்று சொல்லி
தம்பியரைத் தானழைத்து தார்வேந்தர் ஏது சொல்வார்
வாள்வீரா தம்பிசங்கு சோழர் நமை வரவழைக்க வந்தாரே

சோழர் வந்தழைக்கையிலே மறுசேதி சொல்லக்கூடுமா?
உறையூரு மட்டும்நான் இனிப்பயணம் போய்வாரேன்
அத்தைபிள்ளை மைத்துனரை அழைத்தாரே நல்லபொன்னு