பக்கம் எண் :

38அண்ணன்மார் சுவாமி கதை

  கொண்டாடு மண்ணுடையான் செயம் பொன்னு வளநாடு
சிற்றரசன் பட்டணமும் சிறந்த பொன்னு வளநாடு

   என்று கூறுகிறது. குன்றுடையாக் கவுண்டர் மக்களுள் மூத்தவருக்குப் பொன்னர்
என்று பெயர் வைத்ததும் பழங்காலத்தில் பொன் என்ற பட்டத்தைப் பெயரோடு
சூடிக்கொண்ட வழக்கத்தைத் தழுவியே போலும். ஆனால் கொங்கு வேளாளர்களின்
கூட்டங்களுள் பெருங்குடி என்ற கூட்டம் ஒன்று பொன்ன கூட்டத்தினின்றும் வேறாக
இருக்கிறதாகத் தெரிய வந்துள்ளது.

   ஒரு வேளை வேளாளர் தம் பெருமைக்கும், புகழுக்கும் காரணமாக விளங்கிய
பொன்னரும் சங்கரும் பிறந்த குடும்பத்தின் வழி வந்தவர் மட்டும் அச்சிறப்பின்
காரணமாக தம்மைப் பெருங்குடியினர் என்று கூறிக் கொண்ட அக்குடும்பத்தின் வழிவந்து
பல்கிப் பெருகிய இனத்தவர் பிற்காலத்தில் பொன்ன கூட்டத்தினின்றும் வேறானவராகத்
தம்மைப் பெருங்குடியினர் என்று தனியாக குறித்துக் கொண்டிருக்கலாம். அலகுமலைக்
குறவஞ்சியான ஓதாளர் குறவஞ்சியும் ஆதியிலே வேளாளர்கள் குடியேறிய சிறப்பைக்
கூறும் போது பொன்ன கூட்டத்திற்கு முதலிடம் அளிக்கிறது. மற்றும் பல இடங்களிலும்
பொன்ன கூட்டத்தைச் சிறப்பிக்கிறது.

   இவ்வாறு சிறப்பிப்பது பொன்ன குலத்தின் தொன்மையை நமக்கு விளக்கவே
போலும். பொன்குன்ற நாட்டிற்கு அருகே தோரநாடு 500 என கொங்கணி அரசர்களின்
செப்பேடுகளில் குறிக்கப்படும் துவரை நாடு விளங்கியது. எனவே இத்தோர நாடு
எனப்பட்ட துவரை நாட்டு வேளாளர்களான தோரன் (தூரன்) கூட்டத்தார்க்கும்
பொன்குன்ற நாட்டு வேளாளர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு நிச்சயமாக
இருந்திருக்கக் கூடும்.