பக்கம் எண் :

486அண்ணன்மார் சுவாமி கதை

தம்பியரைத்தான் பார்த்து தார்வேந்தர் ஏது சொல்வார்
வாராய் இளவரசே வாள்வீரா தம்பிசங்கு
வெற்றி மதயானை அடா வீரியனே தம்பி சங்கு
பொன்னம்பலத்திலே அந்த பேர் பெரிய சன்னதியில்
சன்யாசி கோவிலிலே தாயார் தவமிருந்து வரம் வாங்கையிலே

மைந்தன் வரம் கேட்டு சன்யாசியரை வாக்குமனுக்கேட்கையிலே
என்றும் பதினாறு என்று தாயார் ஈடேற்றம் கேட்காமல்
வயது பதினாறு என்று வாங்கினார் ஆனவரம்
பதினாறு போதுமென்று தாயார் பாலன் வரம் வாங்கி வந்தார்
பதினாறு முடிந்துதடா தம்பிசங்கு பாருலகில் இருக்கலாமா

மாண்டவர்கள் எழுந்திருந்தால் இந்த மண்டலங்கள் கொள்ளுமா
இறந்தவர் எழுந்திருந்தால் இந்த எல்லை இடங்கொள்ளுமா
இருந்த நாள் போதுமினி மாயனுடபதவி வைகுந்தம் சேர்ந்திடுவோம்
இங்கிருந்த பாவனையாய் நாம் அங்கேயும் நாமிருப்போம்
சோளி சதுரங்கம் மாயன் பக்கம் சொக்கட்டான் விளையாடுவோம்

சதுரங்கம் ஆடிடுவோம் மாயன் பதவியில் சரியாக நாமிருப்போம்
இங்கேயிருந்தாற்போல் தம்பி சங்கு அங்கேயும் நாமிருப்போம்
அண்ணர் வரமாட்டாரென்று தம்பி மனதிலே எண்ணாதே
இருந்திடுவார் என்றுசொல்லி தம்பியோசனைகள் செய்யவேண்டாம்
முன்போக பின்வாரேன் தம்பி முன்னே நடவுமடா
வருகிறார் அண்ணரென்று மாயன் பக்கலிலே வார்த்தை சொல்லும்