பக்கம் எண் :

அண்ணன்மார் சுவாமி கதை495

மாணிக்கம்பூண்டமேனி உங்கள் படுகளத்தில் மண்ணில் புரண்டழுவேன்
கோந்தைகுலைத்துவிட்டு உங்கள் கொலைக்களத்தில்வீழ்ந்தழுவேன்
அயலாரு மக்களுக்கு நான் அழுகிறது நீதமல்ல
பாணம்படவுமில்லை உங்களுக்கு மறுகாயம் தானுமில்லை
அம்பு படவுமில்லை அத்தான் உங்களுக்கு அரைக்காயம் தானுமில்லை

கண்கள் படவுமில்லை உங்கள் மேனியில் காயங்கள் தைக்கவில்லை
மாலைகுலையவில்லை உங்கள் வாச்சமுகம் வாடவில்லை
மலையாவி தணல்வீசி மயக்கங்கள் ஆகியேதான்
நச்சுநீர் வாரியுண்டு மைத்துனரே நல்லுயிர் மாண்டீர்கள்
அனந்தல்வந்து கண்ணசந்து மைத்துனரே அநேகநேரம் சென்றாற்போல்
நித்திரை வந்து கண்ணசந்து நெடுநேரம் சென்றாற்போல்
தூங்கி எழுந்திருந்து ஒரு சொப்பனமுங் கண்டாற்போல்
சேரஎழுந்திருங்கள் மூவரும் செல்லத்தை புத்திரரே
என்று சிவனைத்தொழுது ஸ்ரீராமரைத் தானினைந்து
பேர்கொடுத்த பொன்னம்பல சுவாமி பொசிவாசி ஐயரை

சன்யாசி ஐயரைத் தவங்கொடுத்த புண்ணியரைத் தானினைந்து
எடுத்தாள் திருக்கரகம் உத்தமி ஏந்தினாள் மகாதீர்த்தம்
தீர்த்தத்தை வாரியேதான் நாலுதிசை பார்த்து விட்டெறிந்தாள்
வாரியேதீர்த்தத்தை அத்தைமக்கள் வாள்வீரர் மேல் எறிந்தாள்
சித்தம் இறங்கியேதான் சுவாமி சிவனாரும் காட்சிதந்தார்

வானுலகம் போன உயிர் மாயனுட காரணத்தால்
சிவலோகம் போன உயிர்மூவருக்கும் திரும்பியே வந்திட்டது
கைலாசம் போனஉயிர் மைத்துனர்க்கும் கூடுவந்து சேர்ந்திட்டது