இருமல் காமாலை குன்மம் குட்டம் மண்டையிடி ஈளை மந்தார காசம் இவை எல்லாம் தீர்த்திடும் தெய்வமே என்முன் வந்து இது தருணம் அருள் சரணமே. |
காப்பு-விநாயகர் |
| துதிரியும் வீரமும் சொல்லு நல் கீர்த்தியும் அதிக வித்தையும் ஆண்மையும் தான்உறும் மதுரை வீரன் தன் மாகீதை வாழ்த்திடக் கதிர்கொள் சித்தி விநாயகன் காப்பு அரோ. |
(பொருள்) |
மதுரை வீரன் கொடையும், வீரமும், புகழும், கல்வியும், கலைப்பயிற்சியும், ஆண்மைச் சிறப்பும் கொண்டவன். அவனது சிறந்த கதையைப் பாடப் போகின்றேன். அக் கதையைத் தடையில்லாமல் நான் பாடிட விநாயகக் கடவுளே கருணை புரிய வேண்டும். |
பாயிரம் |
| சித்தி விநாயகர் செய்யபாதம் போற்றி முத்தி அளிக்கும் முருகர் பாதம் போற்றி சொக்கர் திருவடியைத் தொழுது மிகப் போற்றி தக்க திருமாலின் தாள் தாமரை போற்றி அங்கயற்கண் அம்மை இளம்பாதம் போற்றி மங்கை இலக்குமியின் மலர்ப்பாதம் போற்றி தெள்ளு தமிழாசான் திருவடியைத் தான் போற்றி வள்ளி தெய்வானை மலர்ப்பாதம்தான் போற்றி வாணி திருவடியை வாழ்த்திமிகப் போற்றி மாணிக்க வாசகர்தம் மன்னுபதம் போற்றி செப்பறிய சம்பந்தர் செம்பொற்பாதம் போற்றி அப்பர் திருவடியை அன்புடனே தான் போற்றி சுந்தர மூர்த்திஇரு துங்கபதம் போற்றி சொந்தம் மிகுந்தசில தொண்டர் அடி போற்றி பாண்டி வளநாட்டில் பானுவைப் போல் விளங்கும் ஆண்டிகையாம் எங்கள் அதிவீரன் கதைசொல்வேன் |