பக்கம் எண் :

102கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

ஏன் மறந்தாள்?

மன்னரே உம்மை யன்றி
    மணந்திடேன் பிறரை என்றாள்;
கன்னலே நீர்தான் என்றன்
    கட்படும் உலகம் என்றாள்;
முன்னரே நமது நெஞ்சம்
    முழுமையிற் கலந்த தென்றாள்;
சொன்னதைக் காற்றில் விட்டே
    தோகைஏன் மறந்தே போனாள்?
காதலை வடித்துக் கொட்டிக்
    கடிதங்கள் எழுதி விட்டு
வேதனை தந்தா ளன்றி
    விழிக்கடை தந்தாள் அல்லள்;
மாதவள் மயங்க விட்டாள்
    மடல்களோ நூறு விட்டாள்;
சோதனை செய்து தேர்ந்தார்
    துறப்பரோ நெஞ்சிற் காதல்? 2