கூண்டுக் கிளி நேரிசை ஆசிரியப்பா கனிமரப் பூம்பொழில் களிப்புடன் சேர்ந்தே இனிதென வதிந்தேன், இடரொரு சிறிதும் உற்றே னல்லேன், உரிமை யாவும் பெற்றே வாழ்ந்தேன் பெரும்பகை யின்றி. எங்கோ பிறந்தான் எங்கோ வளர்ந்தான் இங்கே வந்தான் என்னையும் கண்டான் வலையினை விரித்தான் வளத்துடன் வாழ்ந்த நிலையினை இழந்தேன், நீள்சிறைக் கூண்டுள் அடைத்தான் என்னை அஞ்சிறை வெட்டி; அடைத்தனன் ஆயினும் அருங்கனி தருவான் பாலுங் கொணர்வான் பசியே இல்லை. ஆலும் வேம்பும் ஆமோ அச்சுகம்? அடிமை வாழ்வு கொடிது! கொடிது! விடியா தோநான் விடுதலை பெறவே? துடையா ரோஎன் துயரினை? எனவே துடியாத் துடித்தேன் துவண்டதென் உள்ளம். வடியாக் கிளவி வழங்கும் சிறுவன் படியாப் பருவம் பழுதிலா உள்ளம் கொண்டவன் ஓர்நாள் அண்டையில் வந்து விளையாட் டுணர்வால் விடுதலை தந்தான்; தலைகாட் டாமல் தப்பி ஓடிட முனைந்தேன் சிறகோ முறிந்தது கண்டேன். நினைந்தேன் நடந்தே நெடுங்கான் ஏக; பிதுங்கும் பெருவிழி அச்சங் காட்டப் |