108 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
காய்ந்தஓர் மரத்தில் ஏறிக் கடிதினில் வெட்டும் போழ்து தேய்ந்தஎன் உள்ளம் நோவத் திட்டினார்; இறங்கி வந்தேன்; ஓய்ந்தஎன் உடலில் குச்சி ஒடிந்திட அடித்தார்; கீழே சாய்ந்தபின் நடந்த தேதும் சற்றுமே அறியேன்’ என்றான் `மற்றவர் காட்டிற் சென்று மரத்தினை வெட்டி னேனென் றுற்றதை உரைத்தாய்! சிறையில் ஒன்றரை மாதம் தங்கு! மற்றது மறுத்தா யாகில் மரத்தினில் விறகு வெட்டி விற்றதில் ஐந்து ரூபா வைத்திடு வெளியில் செல்வாய்!’ என்றனர் அறத்தைக் காப்போர்; இடிதலை வீழ்ந்த தென்ன நின்றனன்; நிமிர்ந்து கண்ணில் நீரினைச் சொரிந்தான்; `ஐயோ!’ என்றனன், `ஏழை காசுக் கெவ்விடம் செல்வேன்; என்னைக் கொன்றிடல் நன்றாம்; ஈசன் கொடுத்ததிவ் விதியோ?’ என்றான் விதிவிதி என்று மக்கள் வீணினில் மாய்ந்து, சூழ்ச்சிச் சதியினில் சிக்கி அந்தோ! சாய்ந்திடும் நிலைமை கண்டும் மதியொரு சிறிது மின்றி மாற்றிட மனமு மின்றி வதிவது நன்றோ? நாட்டீர்! வளமிகக் காண்போம் வாரீர். 7 (ஊர்ப்புறத்தே ஒரு மரத்தில் விறகு வெட்டிக் கொண்டிருந்த ஒருவனை அடித்துத் துன்புறுத்திய கொடுமையைக் கண்டு மனம் நொந்து பாடிய பாடல்.) |