பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்111

உணர்வார் யாரோ?

நிலைமண்டில ஆசிரியப்பா

உழைத்தேன் நன்றே; உணவே இல்லை;
திளைப்பான் ஒருவன் தீயன செய்தே;
என்னுடற் குருதி இறைத்து விளைந்த
பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;
அருமைத் தேனீ! அரிதின் ஓடிச்
சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன்
உண்டான் அந்தோ! உன்போல் நானும்
உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ?
ஒருநாள் இங்கே திருநாள் என்றார்
ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார்
அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர்
சோறு கேட்டேன் “சோம்பல் பயலே!
திமிரா உனக்கு? திருட்டுத் தடியா!
பொறுடா” என்றார் பூசுரர்; என்றன்
தோளை முறித்த தோடுடைச் செவியன்
அருகிற் சென்றே அப்பா! என்றேன்;
“விதிவிதி” என்றான் குறைமதி யோனே. 17