உணர்வார் யாரோ? நிலைமண்டில ஆசிரியப்பா உழைத்தேன் நன்றே; உணவே இல்லை; திளைப்பான் ஒருவன் தீயன செய்தே; என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்; அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ! உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்தார் அலுக்கத் தூக்கி அயர்ந்தேன்; பின்னர் சோறு கேட்டேன் “சோம்பல் பயலே! திமிரா உனக்கு? திருட்டுத் தடியா! பொறுடா” என்றார் பூசுரர்; என்றன் தோளை முறித்த தோடுடைச் செவியன் அருகிற் சென்றே அப்பா! என்றேன்; “விதிவிதி” என்றான் குறைமதி யோனே. 17 |