பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்115

பட்டிக்காட்டான்

நிலைமண்டில ஆசிரியப்பா

உழைப்பே என்னுயிர், களைப்பே யின்றி
உழுவேன், நடுவேன், உறுகளை எடுப்பேன்,
கண்ணெனக் காத்துக் கதிர்முற் றியபின்
அறுப்பேன், சுமப்பேன்; ஆண்டை வீட்டில்
நிறைப்பேன், மகிழ்வேன், நிலத்தவர் மகிழ்வார்;
இல்லம் செல்வேன் என்மனை யாட்டி
எலும்புடன் தோலென இருக்கும் பிள்ளையை
அடித்திடல் கண்டதும் அடித்ததேன்? என்பேன்;
`சோறு சோறெனச் சொல்லி அழுதால்
சோற்றுக் கெங்கே போவது? சொல்வீர்’
என்பாள்; வல்லிடி இதயம் பாயும்;
களஞ்சியம் நிறைத்தோம் கஞ்சி இல்லை!
காலம் வருமெனக் கலங்கி இருந்தேன்;
இவ்வகை வாழ்நாள் இயங்க, ஓர்நாள்
நோயுற் றுடலம் நொந்தேன்; பின்னர்த்
தொடர்ந்தது நோய்தான் தொல்லைகள் உற்றேன்;
உள்ளூர் மருத்துவர் உரைத்த மருந்துகள்
உண்டேன் பயனிலை; ஒருவர் வந்தார்
`நகரம் சென்றால் நன்மை பெறலாம்’
என்றனர் என்பால் இருப்பே இல்லை
உழன்றேன் உழன்றேன் உற்றார் ஒருவர்
பார்க்க வந்தார் “பகவான் காப்பார்
திருப்பதி சென்று தீர்த்தம் ஆடி
முடிஎடுப் பேனென முடிவுசெய் தால்நோய்
விலகும்” என்று விளம்பினர்; கையில்
இல்லை யாயினும் என்னுயிர் வேட்கையால்