பக்கம் எண் :

116கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

வேண்டிக் கொண்டேன் விரைந்தன சின்னாள்;
ஓய்ந்தது நோயும் உழைத்துழைத் தில்லாள்
ஊட்ட ஊட்ட உடலுரம் பெற்றேன்;
உற்றார் சொன்ன உரைதவ றாமல்
காளைகள் காட்டிக் கடன்பணம் பெற்றுத்
திருப்பதி சென்றேன் திருவருள் பெறவே;
அருச்சனை செய்யவும் முடிஎடுப் பதற்கும்
இரண்டு சீட்டுகள் ஈந்தனர்; அவற்றை
அன்பால் பணிவால் அருச்சகர்க் களித்தேன்;
இரண்டில் ஒன்றை என்கையிற் கொடுத்து,
“முடிஎடுக்க அங்கே முதலிற் செல்வாய்”
என்றோர் நாவிதர் இருக்கும் இடத்தைச்
சுட்டிக் காட்டச் சுருக்கெனச் சொன்னேன்;
நாவிதர் எடுக்கவா நானிங்கு வந்தேன்?
உள்ளூர் நாவிதர் உண்டு பலபேர்,
அவரை ஒதுக்கி ஆண்டவன் தனக்கே
வைத்துளேன் முடியை, வம்புசெய் யாமல்
நீரே எடுத்தருள் புரிவதே நேர்மை
என்றேன் அருச்சகர் எரிந்து விழுந்தார்;
“அற்பனே! இவ்விடம் அருச்சனை மட்டும்
நடத்துவோம் நடந்திடு அங்கே” என்றார்;
அருச்சனை மட்டும் ஆண்டவர் ஏற்பார்
முடிநீர் எடுத்தால் முகஞ்சுளிப் பாரோ?
என்றேன்; அங்கே இருந்த பட்டை
நாமம் போட்டவர் “நாயே பேயே”
என்றெல்லாம் பேசி இடித்தார் அடித்தார்;
ஐயா என்னை அடிக்க வேண்டாம்
உயர்ந்த சாதியை உவப்பார் கடவுள்,
நாவிதன் தாழ்ந்தவன் நயவார் அவனை
என்றதால் இவரை என்முடி எடுக்க
வேண்டினேன் தவறோ? விளம்புவீர்! என்றேன்;
“பட்டிக் காட்டான் பட்டிக் காட்டான்”
என்றெனை இகழ்ந்தார் அங்கிருந் தோரோ. 59