120 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
ஆந்திரமும் கன்னடமும் சென்று வந்தேன் அங்கெல்லாம் மொழியுணர்ச்சி விளங்கக் கண்டேன் மாந்தரெனத் திரிகின்றோம் உணர்ச்சி யற்று, வந்தவர்க்கும் போனவர்க்கும் பல்லைக் காட்டிச் சாந்துணையும் காக்கைபிடித் தலைந்து சென்று, சாப்பாடே குறிக்கோளாய் மொழியைத் தாழ்த்தி வாழ்ந்திருக்க நினைக்கின்றோம்; படையெ டுத்து வந்தமொழி வாழவழி செய்து தந்தோம் பிறமொழியை வெறுக்கின்றேன் என்று சொல்லிப் பிழையாகக் கருதாதீர்! தமிழை யிங்கு மறுவறநன் குணர்ந்ததற்பின் பயில்க என்பேன்; மனைவியைமற் றொருவன்பால் அடகு வைத்துத் துறவறமேற் கொளலாமோ? தாய்த வித்துத் துடித்திருக்க அறஞ்செய்ய முனைதல் நன்றோ? கறவையிடம் பால்கறந்து கன்றுக் கின்றிக் கதறிவிழக் கடவுளென்று சிந்தல் நன்றோ? மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை மாய்க்கின்றோம்; மொழியிருக்கப் `பாஷை’ என்போம். பெறுமகிழ்ச்சி `சந்தோஷம்’ ஆகும்; வேட்டி `வேஷ்டி’ எனப் பெயர்மாறும்; பதற்றம் என்னோம் மறுமொழிபோல் பதஷ்டமெனக் குதிப்போம்; தண்ணீர் ஜலமாகும்; மறைக்காடு `வேதா ரண்யப்’ பிறமொழியாய் மாறிவிடும்; மொழியு ணர்ச்சி பிழைத்திருக்க இடமுண்டோ? புதைத்து விட்டோம் வணக்கமெனச் சொல்பவரைக் கட்சி சார்த்தி வாட்டுகிறோம்; “தாய்மொழியைப் புதைத்து விட்டுப் பிணக்கல்லில் வரவேற்பு நல்கல் வேண்டேன் பிறமொழியின் அடிமைகளே” என்று சொன்ன குணக்குன்றாம் நம்காந்தி எந்தக் கட்சி? குறிக்கோளா வங்கமொழி வளர்ப்பான் வேண்டிப் பிணக்கின்றிப் பலநூல்கள் தந்த தாகூர் பேணினரே மொழியுணர்ச்சி எந்தக் கட்சி? |