கொஞ்சுமொழி வஞ்சி!எனைத் திருத்தி விட்டாய் கூறுவதைச் செயலுக்குக் கொணர்வேன்; நம்பால் தஞ்சமென வந்தவரின் சூழ்ச்சி யாலே தமிழ்வழங்காக் கோவிலுள்ளே தலையைக் காட்டேன் எஞ்சியுள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன் இப்படியே என்வீட்டைத் தமிழ்வீ டாக்க வஞ்சினமும் கொள்கின்றேன் என்று சொன்னேன். வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்; ஏன்சி ரித்தாய்? என்றேன்நான்; `கோவிலுக்குப் போகா விட்டால் இனியதமிழ் எழுச்சிபெற்று விடுமா என்ன? நன்றத்தான்! தமிழ்நாடும் கோவில் மன்றும் நாதியற்ற சொத்தா?உம் சொந்த மன்றோ? வென்றந்த உரிமை பெற வீரம் இல்லை? ஏனத்தான் வீண்பேச்சு? போதும் போதும்!’ என்றுரைத்தாள்; தோழர்களே! உம்பாற் சொன்னேன் என்செய்யப் போகின்றீர்? ஆய்ந்து சொல்லும்! 13 |