பக்கம் எண் :

132கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

துறைதோறும் தமிழே காண்பீர்

அறுசீர் விருத்தம்

பொறுப்பற்றுக் கிடந்தார், முன்னாள்
    புகுந்தபுன் மொழிகட் கெல்லாம்
விருப்புற்றுத் தாழ்ந்து நின்று
    வேலையில் அமர்தல் ஒன்றே
குறிக்கொண்டு வாழ்ந்தார், தாய்க்குக்
    கொடுமைகள் செய்து வந்தார்,
வெறுப்புற்று நின்றா ரெல்லாம்
    விழைந்தனர் தமிழை இந்நாள்

தாய்மொழிப் பற்று நெஞ்சில்
    தளிர்த்ததா என்றால் இல்லை
ஆய்முறை அறிஞ ரெல்லாம்
    அன்புடன் அறைந்த நாளில்
வாய்புகாச் சொல்லால் வைதே
    வயிற்றினை வளர்த்தார்; அந்தத்
தூயவர் முதலில் நின்று
    தொழுதகை காட்டு கின்றார்

ஆட்சியில் தமிழாம் என்றே
    அரசினர் ஒருசொல் சொன்னார்;
காட்சியைக் `காக்ஷி’ என்னும்
    கயவரும் தொழுது நின்றார்;
மாட்சிமை என்று சொல்லி
    மயங்கிடேல் தமிழ நாட்டீர்!
தோட்சுமை இறங்க வில்லை
    தொழுதகை அனைத்தும் நன்றோ?