பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்139

பெண்ணினமும் ஆணினமும் சமுதா யத்தின்
    பெருமைமிகும் இருகண்கள்; பெண்மை என்னும்
கண்ணொளியைக் கெடுத்தனரே உலகோர் அந்தோ!
    கருணைஒளிர் தாயினத்தைத் தாழ்த்தல் நன்றோ?
எண்ணிவிடின் நோகின்ற தென்றன் நெஞ்சம்
    ஏனிந்த ஓரவஞ்சம்? நேர்மை வேண்டும்;
பெண்மைஇன்றி ஆணில்லை அதனால் பெண்மை
    பேணிடுக சமுதாயம் தழைக்க என்றார்

பெற்றெடுத்த தமிழ்த்தாயின் பாலை உண்டோன்
    பெறுமின்பம் உயரின்பம்; வீடு பேற்றை
எற்றுக்காம் எனக்கருதச் செய்யும் அந்த
    இன்பமது; மற்றும்தாய் மொழியை நன்கு
கற்றபிற கயல்மொழியைக் கற்றல் வேண்டும்
    கனித்தமிழை உயிர்த்தாயைத் தவிக்க விட்டு
நிற்றல்பெரும் பிழை?என்றார்! தாய்த விக்க
    நினைப்பாரோ எவரேனும் அறமே செய்ய?

அன்புமிக்கார் ஆனாலும் அடிமை ஆகார்.
    அறிவுமிக்கார் ஆயினுமே செருக்குக் கொள்ளார்
பின்புமவர் பணிவுமிக்கார் இருந்தும் அன்னார்
    பெருமிதத்திற் கடுகளவும் குன்றார், எங்கும்
இன்புமொழி பேசினுமே கருத்து வேறு
    காணுங்கால் இடித்துரைக்கத் தவறார், நெஞ்சில்
வன்பில்லார் எனினும்நல்ல உறுதி கொண்டார்,
    வரும்ஆசை அற்றார்தாம் துறவி அல்லர்

தொண்டுள்ளம், பழமைஒளிர் புதுமை, உண்மை,
    தூய்மை, அன்பு, தமிழ்நெஞ்சம், பொறுமை, பெண்மை,
கண்டன்ன இனியமொழி, எளிமை, நண்பு,
    கருத்தீர்க்கும் சொல்வன்மை, அறிவு, கல்வி,
விண்டுரைக்க இயலாத அமைதி, வீரம்,
    வினைஇன்னா செய்யாமை, ஆன்ற விந்து
கண்டடங்கு கொள்கைஎன அறங்க ளாகக்
    காணுகின்ற அத்தனையும் அமைந்த சான்றோர் 7