பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்149

ஒருவர்பிழை பொறுத்திடுதல் இருவர் நட்பாம்;
    உயர்நூல்கள் பயின்றாலும் வாழ்க்கை ஏட்டில்
ஒருவருளம் பிறர்பயில வேண்டும்; வேண்டின்
    உண்மைநிலை இன்பநிலை காணல் வாய்க்கும்;
பெருகிடுநல் வாழ்வுக்கு மனைவி மக்கள்
    பேரணியாம் மங்கலமாம் என்பர் ஆன்றோர்;
அருகிருந்து திறந்துள்ளம் அளவ ளாவும்
    அன்புளத்தன் உயிர்நண்பன் ஒளிவி ளக்காம்

உளமொத்த இரட்டையராய் உடன்பி றப்பாய்
    உணர்வொன்றாய்ப் பழகிவரும் நண்பன் தன்னை
உளமொத்த துணையாகக் கொள்க என்றே
    உன்கையில் அடைக்கலமாத் தந்தேன்; எங்கள்
உளமொத்த வாழ்வேபோல் வாழ்க அன்பை
    உயிரென்று போற்றிடுக; இன்பம் பொங்க
வளமிக்க தமிழ்பாடும் என்றன் நாவால்
    வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றேன். 5

(கெழுதகை நண்பர் திரு. தமிழண்ணலுக்கும் அடைக்கம்மை என்ற சிந்தாமணிக்கும் நடைபெற்ற திருமணத்தில் பாடப் பெற்ற பாடல்.)