பக்கம் எண் :

150கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

கா அப்பா

எண்சீர் விருத்தம்

செந்தமிழைப் பயின்றமையால் தலைமை பெற்ற
    சிலரிங்குத் தமிழுக்கே ஊறு தேடி
வந்ததுண்டு; தமிழ்வாழ முயல்வா ராயின்
    வாழ்வுகெடும் புகழில்லை பொருளும் இல்லை
இந்தநிலை இருந்தமையால் அஞ்சி யஞ்சி
    இருந்தார்கள்; ஆனால்நீ தமிழைக் காக்க
எந்தநிலை நிகழ்ந்தாலும் தயங்க வில்லை
    எவருக்கும் அஞ்சவில்லை துணிந்து நின்றாய்

பன்மொழிகள் பயின்றவர்கள் நமது நாட்டில்
    பலர்பலராய் இருக்கின்றார்; தமிழைக் காக்க
நன்முயற்சி அவரெல்லாம் செய்த துண்டா?
    நாமுண்டு சோறுண்டென் றிருந்து விட்டார்;
முன்வந்து முயல்பவரைக் குறையும் சொல்வார்
    முத்தமிழைச் செந்தமிழைப் பழித்துக் கூறும்
புன்மொழியும் புகன்றிடுவார் இவர்கள் எல்லாம்
    புலவரெனத் தமிழகத்தில் திரியக் கண்டோம்

நுண்ணறிவுத் திறமுடையாய்! நீயும் இங்கு
    நுனித்துணர்ந்தாய் பலமொழியும்; ஆயி னும்நம்
பண்ணுயர்ந்த தமிழ்மொழிக்கே நின்றன் நெஞ்சைப்
    பரிந்தளித்தாய்! தமிழ்ப்பற்றே மிக்கு நின்றாய்!
அண்ணலுன்போல் பன்மொழியிற் புலவர் என்போர்
    ஆருள்ளார் தமிழ்காக்க? அதனா லன்றோ
கண்ணியத்தால் உயர்தமிழ்த்தாய், தீங்கு வந்தால்
    காஅப்பா துரைமகனே என்று சொன்னாள்